For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் காணும் பொங்கல் - மெரீனாவில் மக்கள் வெள்ளம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Crowd at Marina beach
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பொழுது போக்குப் பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சென்னையில்தான் இது முன்பு மிகவும் விசேஷமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.

இன்று காணும் பொங்கலையொட்டி சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியிருந்தது.

கடற்கரையில் நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சாலைகளில் வாகனங்கள் போவதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது.

இதேபோல பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மாமல்லபுரம், திருச்சி முக்கூடல், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூடி காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.

காணும் பொங்கலின்போது கடலில் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். சென்னையில் 5000 போலீஸார் கடற்கரைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இருசக்கர வாகனங்கள், மாட்டுவண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலமாக மக்கள் மெரீனா கடற்கரைக்கு வந்திருந்தனர்.

சிறப்பு பேருந்துகள், கூடுதல் ரயில்கள் விடப்பட்டிருந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு படையெடுத்தது.

நண்பகலிலேயே கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியத் தொடங்கியது. இதேபோல சென்னை தீவுத்திடலில் உள்ள பொருட்காட்சியிலும் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது. கிண்டி சிறுவர் பூங்காவிலும் மக்கள் தங்கள் குடும்பத்தோடு கட்டுச்சோற்றுடன் வந்து குவிந்தனர்.

வள்ளுவர்கோட்டம், அண்ணாநகர் டவர் பூங்கா, சென்ட்ரல் அருகே உள்ள மைலேடிஸ் பூங்கா ஆகிய இடங்களிலும் மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள்.

கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடு படுத்தப்பட்டனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்து போலீசார் கூட்டத்தினரை கண்காணித்தனர்.

ஒரு சிறப்பு காவல் நிலையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாட வருபவர்கள் கடலில் குளித்தால் அவர்களை தடுப்பதற்கு மெரினா கடற்கரையில் இருந்து, கலங்கரை விளக்கம் வரை தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.

தப்பித்தவறி கடல் அலையில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக 150 நீச்சல் வீரர்கள் படகுகள் மற்றும் கட்டுமரங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

அவர்களுக்கு உதவியாக தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் இருந்தனர். கடற்கரை பகுதியிலேயே 14 மருத்துவ குழுக்களும் உடனடி சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

10 ஆம்புலன்ஸ் வேன்களும் தயார் நிலையில் இருந்தன.

சங்கிலி பறிப்பு, பிக் பாக்கெட் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தப்பி செல்ல முயல்பவர்களை விரட்டி பிடிப்பதற்காக 4 விசேஷ வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. குதிரைப்படை போலீஸாரும் ரோந்து சுற்றியபடி இருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X