புழல் சிறையில் சென்னை சங்கமம் - கைதிகள் குஷி
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கைதிகள் விசிலடித்து, குஷியுடன் பார்த்து ரசித்தனர்.
கடந்த 10ம் தேதி தொடங்கிய சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் பலத்த வரவேற்புடன் கலக்கலாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று புழல் மத்திய சிறையி்ல சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை டிஐஜி துரைசாமி தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை சங்கமத்தின் மூளையான கவிஞர் கனிமொழி, தனது கணவர் அரவிந்தனுடன் இதில் கலந்து கொண்டார். கைதிகளுக்கு பழங்கள், புத்தகங்களையும் அவர் பொங்கல் பரிசாக அளித்தார்.
தப்பாட்டம், சென்ட மேளம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவற்றை கைதிகள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
விசிலடித்தும், ஆடிப் பாடியும் உற்சாகமாக கண்டு களித்தனர்.
இதுகுறித்து கனிமொழி கூறுகையில், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறையிலும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வெளியில் உள்ளவர்களுக்கும், கைதிகளுக்கும் வித்தியாசம் இல்லை. காரணம், ரசனை அனைவருக்கும் ஒன்றுதான் என்றார்.