குறும்பட படைப்பாளிகளுக்கு புதிய அமைப்பு!
நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வேக நாட்களில் ஒரு கார்ட்டூன் போல, சொல்ல நினைத்ததை 1 முதல் 30 நிமிடங்களுக்குள் திரையில் சொல்லி முடித்துவிடுவது ஒரு தனி கலை. இதற்கு குறும்படங்களே சிறந்த களமாகத் திகழ்கின்றன.
இன்றைய சூழலில் இந்த மாற்றுப் படைப்பாளிகளுக்கு புதிய களம் உருவாகி வருகிறது தமிழ் திரையுலகில்.
சமீப நாட்களாக நிறைய குறும்பட படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர். அவர்களது படைப்புகள் கேன்ஸ் பட விழா வரை சென்று பாராட்டுக்களைப் பெற்று வந்துள்ளன.
இந்த மாற்று திரைப்பட களத்தையும் முறைப்படுத்துவது அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் 'தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க'த்தின் ஒரு அங்கமாக, குறும்பட படைப்பாளிகளின் அமைப்பு, சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
குறும்பட படைப்பாளிகளுக்கு வழிகாட்டவும், உதவிகள் வழங்கவும், விருதுகள் தந்து கவுரவிக்கவும் இந்த அமைப்பு என சங்கத்தின் தலைவர் ஜேவி ருக்மாங்கதன் தெரிவித்துள்ளார்.
பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, 'பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன், சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், நடிகர் பாண்டியராஜன், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.