கைவிடப்பட்ட முதியவருக்கு புது வாழ்வு கொடுத்த போலீஸ்
சென்னை: மனைவி, மகனால் கை விடப்பட்டு சாலையோரம் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அனாதையாக கிடந்த முதியவருக்கு, சென்னை அபிராமபுரம் போலீஸார் புது வாழ்வு கொடுத்து ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டுள்ளனர்.
அந்த பாவப்பட்ட முதியவரின் பெயர் காளிமுத்து. சொந்த ஊர் பரமக்குடி. 63 வயதாகிறது. மனைவி பெயர் பாப்பா, மகன் பெயர் கண்ணன். இருவரும் ஆலந்தூரில் வசித்து வருகின்றனர். முதியவரை இவர்கள் இருவரும் கை விட்டு விட்டனர்.
இதனால் தெருவில் தங்கிக் கொண்டு கிடைத்த வேலையைப் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார் காளிமுத்து.
அபிராமபுரம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் விழுந்து கிடந்தார் காளிமுத்து. அப்பகுதி வழியாக வருவோர், போவோர் அவரைப் பார்த்து விட்டு அப்படியே தங்களது வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தனர்.
யாரும் அந்த முதியவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. யாரேனும் இரக்கப்பட்டு, டீ, பன் வாங்கிக் கொடுத்ததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிடந்தார் காளிமுத்து.
இதைப் பார்த்த அபிராமபுரம் போலீஸார் முதியவருக்கு உதவ முயன்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், அனைத்து வகையிலும் அவருக்கு உதவ முயன்றோம். அரசு மருத்துவனைகள், ஆம்புலன்ஸ், பல தொண்டு நிறுவனங்களை அணுகினோம். ஆனால் கூட யாராவது இருந்தால்தான் எங்களால் அழைத்துச் செல்லமுடியும் என அவர்கள் கூறி வர மறுத்து விட்டனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அழைத்த போலீஸார் யாராவது ஒருவர் முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுமாறு கோரினர். ஆனால் யாருமே முன்வரவில்லையாம்.
சதீஷ் என்பவர் காளிமுத்துவுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார். அவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக பெரியவரை மருத்துவமனைக்கோ அல்லது இல்லம் ஏதாவதுக்கோ மாற்ற முயற்சித்தோம். ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை.
தெருவில் காயமடைந்து கிடக்கும் நாய்க்கு உதவ நம் மக்கள் ஓடி வருவார்கள். ஆனால் ஒரு மனிதனைக் காப்பாற்ற ஒருவரும் வராதது துயரமானது என்றார்.
பெரியவரின் உயிரைக் காப்பாற்ற போலீஸாரே தினசரி சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். ஒரு டாக்டரையும் ஏற்பாடு செய்து சிகிச்சை அளித்து வந்தனர்.
யாருமே உதவ முன்வராததால் தாங்களே பெரியவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்க முடிவு செய்தது போலீஸ். இந்த நிலையில், கொளத்துவான்சேரியைச் சேர்ந்த லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லம் உதவிக்கு வந்தது.
காளிமுத்துவை தங்களது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக கூறி அவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றில் அழைத்துச் சென்றனர். இதனால் காளிமுத்துவுக்கு புது இல்லம் கிடைத்தது, புது வாழ்க்கையும் கிடைத்துள்ளது.