ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் விழா
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. உலக புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது.
தினமும் பல்வேறு பூஜைகள், சினிமா நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, இன்னிசை விருது போன்றவை நடந்து வருகிறது. ஓன்பதாம் திருவிழாவான இன்று காலை பள்ளியுணர்த்தல், நிர்மல்யா தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, உஷா பூஜை ஆகியவை நடக்கிறது.
நாளை காலை 10.10 மணிக்கு கோயில் முன்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட பண்டார அடுப்பில் முதல் தீபம் ஏற்றப்பட்டு பொங்கல் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நிவேத்திய அர்ப்பணம் நடக்கிறது.
கிழக்கோட்டை தம்பானூர், பாளையம், ரயில்வே ஸ்டேஷன், ஜங்ஷன், கரமனை, பாபனங்கோடு உள்பட சுமார் 25 கிமீ சுற்றளவுக்கு பொங்கலை இடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் ஞாயிற்று கிழமை வருவதால் சுமார் 30 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பொங்கலை ஓட்டி கிழக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பானை விற்பனை நடந்து வருகிறது. பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக நெய்யாற்றின்கரை, களியாக்கவிளை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.