துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: கடந்த 8-ம் தேதி துபாயில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் புனித மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இதற்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கூத்தாநல்லூர் அஹமது முஹைதீன் தலைமை தாங்கினார். ஹாபிஸ் முஹம்மது பஷீர் இறை வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே. என்.அப்துல் காதிர் ஆலிம் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் தனது உரையில் மிஃராஜின் போது ஐங்காலத் தொழுகை கட்டாயமாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் தொழுகையினை முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றார்.
இதை தொடர்ந்து முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப், லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
சிறப்புரைகளுக்குப் பின் தொழுகை, தவ்பா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் தொகுத்து வழங்கினார்.