பொன்னர்-சங்கர் கதை மெய்யா, பொய்யா?
சில நூல்கள் பரபரப்பை ஏற்படுத்தும், சில நூல்கள் பெரும் புகழ் பெறும். குறிப்பாக பிரபலங்கள் எழுதும் நூல்கள் என்றால் காட்டுத் தீ போல வேகமாக பிரபலமாகி விடும்.
முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களில் மிகவும் பிரபலமானது பொன்னர்-சங்கர் நூலும் ஒன்று. இந்த நூலில் பொன்னர்-சங்கர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உண்மை வரலாற்றை மறைத்து புனையப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு பல காலமாகவே உள்ளது.
இந் நிலையில், தலையூர் காளியின் வரலாற்றை ஆராய்ந்து, பொன்னர்-சங்கர் கதை உண்மை வரலாற்றை மறைத்து புனையப்பட்ட ஒரு கற்பனையான கதை என்பதை ஆதாரப்பூர்வமாக வரலாற்றுச் சான்றுகளுடன் தயாரித்து வருகின்றார் வரலாற்று ஆய்வாளர் இல.பரணன்.
இது வரை தமிழில் வெளி வந்துள்ள எந்த நூல்களிலும் இல்லாத அளவு சுமார் 120 கறுப்பு-வெள்ளை மற்றும் வண்ண படங்களுடன் புத்தகமாக வெளிவர உள்ளதாம். தற்போது, இந்த நூலின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இந்த பொன்னர்-சங்கர் ஆய்வு நூல் மார்ச் மாத துவக்கத்தில் வெளிவர உளளதாம்.
எழுத்துலகில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ள முதல்வர் கருணாநிதியின் நூலுக்குப் பதிலடியாக வெளியாகவுள்ள இந்த நூல் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.