சென்னையில் சர்வதேச நாடக விழா ஆரம்பம்
சென்னை : சென்னை எழும்பூர் மியூஸியம் திரையரங்கில் இன்று சர்வதேச நாடக விழா துவங்குகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மேயர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் துவங்கி வைக்கின்றனர்.
டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா, தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து சென்னையில் சர்வதேச நாடக விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இந்த விழா இன்று தவங்கி வரும் 20-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் அரங்கு, சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் அமைந்துள்ள முத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கத்தில் தினசரி இரண்டு நாடகங்கள் நடைபெறுகின்றன.
நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா கடந்த 12 ஆண்டுகளாக பாரத் ரங் மஹோத்சவ் என்ற பெயரில் சர்வதேச நாடக விழாவை நடத்தி வருகிறது.
இந்த விழாக்களில் இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள சிறந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
இந்த 10 நாட்களும் மியூசியம் அரங்கில் மாலை 6 மணியளவிலும், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் 7 மணியளவிலும் நாடகம் நடைபெறும்.
இந்த நாடக விழாவில் 11 இந்திய மொழி நாடகங்களும், 8 உலக மொழி நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. பிரபல நாடக ஆசிரியர்களான ஹசிப் தன்வீர், ந. முத்துசாமி, இப்சன் போன்றோர் எழுதிய நாடகங்களைப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முக்கிய இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.
சேத்துப்பட்டு முத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் தினந்தோறும் மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் முதல்நாள் நடைபெற்ற நாடகங்களின் இயக்குநர்களை மறுநாள் காலை 10.30 மணியளவில் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடக இயக்குநர் பிரளயன் மற்றும் நாடக விமர்சகர் சதானந்த மேனன் ஆகியோர் நாடக விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள்.