இது தமிழர்களுக்கு ஒரு பொற்காலம்-ஜெயகாந்தன்
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, 2007, 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
தமிழக அரசின் கவிஞர் பாரதி விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு அவர் பேசுகையில்,
தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி. அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் அவர். இன்னும் பல எழுத்தாளர்களை வருங்காலத்தில் அவர் கௌரவப்படுத்த வேண்டும் என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில், விருது பெறுவதற்கு ஒரு பெருமை வேண்டும். அவ்வாறு பெறுகிறவர்கள் யார் கொடுத்தாலும் பெற மாட்டார்கள். விருது தருகிறவர் யார் என கேட்பார்கள். அப்படி கேட்டு விருதுகளை நிராகரித்தவர்கள் அதிகம். முதல்வர் கருணாநிதி கொடுத்தால் எந்த கலைஞனும் விருதை ஏற்று கொள்வான்.
கலைமாமணி விருதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 1967ல் அண்ணா கையால் விருது பெற்றவர்தான் முதல்வர் கருணாநிதி. அன்று கலைமாமணி பெற்றவர், இன்று கலைமாமணி விருது வழங்குகிறார்.
முதல்வர் கருணாநிதியின் ஆட்சி ஜெயகாந்தன் குறிப்பிட்டதை போல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொற்காலமாகத்தான் திகழ்கிறது. ஒரு சமுதாயம் உயிரோடு இருப்பது வேறு. உயிர்ப்போடு இருப்பது வேறு. உயிரோடு இருக்க உணவு, பாசம், செல்வம் இருந்தால் போதும். உயிர்ப்போடு இருக்க உணர்வு முக்கியம். அந்த உணர்வுக்கு கலை, கலைஞர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தை கொடுப்பது முதல்வர் கருணாநிதி என்றார்.
முதல்வரை மதிக்கவில்லையே: குஷ்பு ஆவேசம்
விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உட்பட பெரும்பாலான கலைஞர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டு அரங்கத்தை விட்டு வெளியேறி விட்டனர்.
இது குறித்து விழாவில் பேசிய குஷ்பு, தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி எல்லோருக்கும் விருதுகள் கொடுத்திருக்கிறார். அடுத்து அவர் பேருரையாற்றவிருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் விருது வாங்கியவர்கள் யாருமே அரங்கத்தில் இல்லை. எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். விருது கொடுத்து மகிழ்வித்த தமிழக முதல்வருக்கு மதிப்பு கொடுக்கவில்லையே. விழாவின் இறுதி வரை இருந்து முதல்வரின் உரையை கேட்டுவிட்டு செல்ல வேண்டாமா?. நான் வேறுமாதிரி பேச நினைத்தேன். எல்லாம் மாறிவிட்டது என்றார்.