பெற்றோர்கள் ஊழல் செய்யாமல் பிள்ளைகள் கண்காணிக்க வேண்டும்-கலாம்
அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் அருகே அனைத்து போடா மாணவர் சங்கத்தின் 43வது வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு கலாம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், மாணவரும், தங்களது வீட்டிலிருந்தே ஊழல் ஒழிப்பை தொடங்க வேண்டும். தங்களது பெற்றோர்கள் ஊழல் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். செய்வதாக தெரிந்தால் அதைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.
நாட்டின் வளர்ச்சிக்காக தங்களுக்குத் தாங்களே இலக்கு நிர்ணயித்துக் கொள்ள மாணவர்கள் முயல வேண்டும். அந்த இலக்கை அடைவேன் என்று உறுதி பூண்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில், சமுதாயத்தில், நாட்டில், உலகில் ஒரு நல்ல மனிதனாக இருப்பேன் என்று உறுதி பூண வேண்டும். எனது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்று உறுதி பூண வேண்டும் என்றார் கலாம்.