குற்றாலத்தில் தொடங்குகிறது சீசன் - தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரம்!
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களி்ல் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக சீசன் இருப்பது வழக்கம். இக்காலங்களில் குற்றாலம் நோக்கி நாடெங்கும் இருந்து சுமார் 30லட்சம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து தென்றல் காற்றையும், சாரல் மழையினையும் ஒரு சேர அனுபவித்து விட்டு அருவிகளில் ஆனந்தமாய் நீராடி விட்டு செல்வர்.
இந்தாண்டு சீசனுக்கான காலத்திற்கு முன்பாகவே சுமார் 8 முறை கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பலத்த மழை இப்பகுதியில் பெய்ததால் அருவிகளில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. தண்ணீர் வரத்து சிறிதளவு இருப்பினும் குறைந்தளவே விழும் அருவி நீரில் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர்.
மேலும் கோடை வெயில் காலத்தின் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாலும், நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைவதாலும் இப்போதே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவ மழை தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகளோடு மேகக் கூட்டங்கள் மலை முகடுகளை தழுவி செல்லத் தொடங்கியுள்ளது. மேலும் சாரல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
ஐந்தருவியில்..
கோடைகாலம் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் திரும்புவது குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நிறைந்த பகுதிகளான தென்காசி பகுதியை நோக்கிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகமெங்கும் மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க சுற்றுலா பயணிகள் நீர்நிலை பகுதிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் தற்போது கல்லூரி, பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளதால் பெற்றோர்கள் குடும்பத்தோடு பல்வேறு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஐந்தருவியில் 2 கிளைகளில் மட்டும் தற்போது தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சீசன் தொடங்கும் முன்பே கோடை மழையின் கருணையால் கொட்டும் அருவி நீரில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆனந்தமாய் குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். சீசன் தொடங்கும் வரை இந்த அருவியில் தண்ணீர் வரத்து இருக்குமா, என்பது தெரியவில்லை. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் குளிர்ச்சியோடு குளியல் போட்டு செல்கின்றனர்.
தற்காலிக கடைகள்
சீசன் உள்ள மூன்று மாதங்களும் குற்றால அருவிகளில் விழும் மூலிகை கலந்த தண்ணீரில் குளித்து மகிழவும், நோய் பிணியை அகற்றி செல்லவும் உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நேரங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். தற்போது குற்றாலநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களில் 100 கடைகள் வைக்க டெண்டர் விடப்பட்டு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.