துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சித்திரைச் சீராடல்
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் "சித்திரைச் சீராடல்" நிகழ்ச்சி 20-04-2012 அன்று இந்தியா கிளப் தர்பார் ஹாலில் சிறப்பாக நடந்தது.சங்கச் செயலாளர் திருமதி காயத்ரி சந்திரசேகர் உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துச் சொல்ல, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. சங்கத் தலைவி திருமதி மீனாகுமாரி பத்மநாதன் நந்தன வருட வாழ்த்துக்களைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தியதோடு, கடந்த மாதம் நடந்த சங்கத் தேர்தலில் உறுப்பினர்கள் தற்போதய கமிட்டியே தொடருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் பொறுப்பை ஏற்று நடத்துவதாகத் தெரிவித்துக் கொண்டார்.
சித்திரை மாதத்தில் வரும் சிறப்புக்களை அடிப்படையாகக் கொண்ட இவ்விழாவில் சித்ரா பெளர்ணமியை நினைவுகூறும் விதமாக இந்து பத்மநாதன் வடிவமைத்துக் கொடுத்த கள்ளழகர் வருகை, மீனாட்சி திருக்கல்யாணம் பற்றிய நடனம், 12 குழந்தைகளின் அபிநயத்தில் மேடையையே நகர வைத்தது. சிறு குழந்தைகளின் குரலில் செய்நன்றி அறிதல், புதல்வரைப் பெறுதல், அதிகாரங்களில் வரும் குறளும், பொருளும் குறள் சொல்லும் நேரத்தில் கொஞ்சும் தமிழெனக் கொட்டியது.
சொல்லுக்குள் சுகம் என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி திருமதி மீனாகுமாரி பத்மநாதன் அளித்த விளக்கம் கற்றது கைமண்ணளவு கூட இல்லை, இன்னும் கற்க எவ்வளவோ இருக்கின்றது என்பதைக் காட்டியது. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்திய டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் திருமதி ஸ்ரீரங்க நாச்சியார் அசோக்குமார் அவர்களின் சிந்தனையில் தோன்றிய பாவைக்கூத்து 3 சிறு குழந்தைகளின் நடிப்பில் துள்ளி விளையாடியது.
பாவேந்தர் பாரதிதாசனின் தோற்றமும், மறைவும் சித்திரை மாதமே என்பதால் அவர் புகழ்பாடும் விதமாக அவர் உயிராக எண்ணிய தமிழ் பற்றி "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலை 3 குழந்தைகள் மாஸ்டர் பாபு அவர்களின் பயிற்சியில் கொட்டும் அருவியெனப் பாடி அசத்தினர். பசுமைப் பாசறையே இளவேனிலெனும் வசந்த காலம். தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமான வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் "வசந்தத்தில் ஒரு நாள் " என்னும் நகைச்சுவைக் குறுநாடகத்தில் 9 குழந்தைகளின் கலக்கல் நடிப்பில் அனைவரையும் கலகலக்க வைத்தார் அதனை வடிவமைத்த திருமதி சுஜாதா விஷ்வநாத்.
தேர்த் திருவிழாக்களில் நாட்டுப்புறக் கூத்துக்கள் தினம் நடைபெறும். இங்குள்ள மக்கள் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள் என்பது சந்தேகமே. எனவே எல்லோரும் தெருக்கூத்தைத் தெரிந்துகொள்ளும் விதமாக சங்க உறுப்பினர்கள் நால்வர் நடித்த நடிப்பில் அரங்கமே அதிர்ந்தது. பக்க வாத்தியக்காரர்களாக வந்த 4 குழந்தைகளின் நடிப்பும் அற்புதம். இதனை வடிவமைத்தவர்கள் திருமதி காயத்ரி சந்திரசேகர், திருமதி சாரதா ஹரி. நிகச்சியைப் பார்க்க, பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார் திருமதி காயத்ரி சந்திரசேகர்.
விழா என்னும் திறந்த வாசல் வழியேதான் நம் நாட்டு மக்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற தாகூரின் வாக்கிற்கிணங்க "சித்திரைச் சீராடல்" நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பங்குபெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.