குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்திய முப்பெரும் நிகழ்ச்சிகள்!
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்திய முப்பெரும் நிகழ்ச்சிகள் 06.04.2012 அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத் ஃகைத்தான், கேடிக்(K-Tic) தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் நடைபெற்றன.சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎம்என் முஹம்மது ஸலீம் அவர்கள், "கரைந்து போகும் இஸ்லாமியக் கலாச்சாரமும், அதை மீட்டெடுக்கும் வழிமுறைகளும்" என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், கடந்த காலங்களில் நம்மிடையே பரவிக் கிடந்த இஸ்லாமியக் கலாச்சாரம், அவற்றினால் ஏற்பட்ட சமூக நலன்கள், அவற்றை சேதப்படுத்திய அன்னிய கலாச்சாரம், அதனால் விளைந்த சமூக தீங்குகள், மீட்டெடுக்கப்பட வேண்டிய நமது பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், அவற்றுக்கான வழிமுறைகள் என பல செய்திகளை வரலாற்று ஒளியில் பட்டியலிட்டு கூடியிருந்த அவையோர் உள்ளங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எழுச்சியுரையை நிகழ்த்தினார்.
அடுத்த நிகழ்ச்சியாக, இளையான்குடி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் எழுதிய கவிதைத் தொகுப்பு நூலான "வஹீயாய் வந்த வசந்தம்" வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் எஸ். பீர் முஹம்மது நூலை வெளியிட முஹம்மது ஸலீம் பெற்றுக் கொண்டார். நூல் குறித்த விளக்கவுரையை சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ. எடுத்துரைத்தார்.
நிறைவு நிகழ்ச்சியாக சமீபத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த புனித உம்ரா 2012 யாத்திரையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இரண்டு சிறப்பு விருந்தினர்களும் பரிசுகளை வழங்கினர்.
சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓத நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. சிறப்பு விருந்தினர்கள் இருவருக்கும் சங்கத்தின் தலைவர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். ஏறக்குறைய 750க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் புனித ஜம்ஜம் தண்ணீர் மற்றும் பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.