கந்தூரி விழா- நாகூரில் சந்தன கூடு ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு
நாகூர்: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
நாகூர் ஆண்டவர் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் 455வது ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 7 மணிக்கு நாகை அபிராமி அம்மன் கோயில் வாசலில் இருந்து வானவேடிக்கையுடன் புறப்பட்டது.
இந்த ஊர்வலம் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, காடம்பாடி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. நள்ளிரவுக்கு பின்பு நாகூர் தர்கா வாசலை அடைந்தது.
அங்கு சந்தனக் கூட்டிலிருந்து சந்தன குடம் இறக்கப்பட்டு ஹஜரத்து ஆண்டவர் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹாஜி ஹஜரத் முத்தவல்லி கலிபா மஸ்தான் சாஹிபு காதிரி ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசினார்.
பின்பு அங்கிருந்த அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது. அதை அனைவரும் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.