அமெரிக்காவில் திருக்குறள் போட்டி... பரிசு 5000 டாலர்!
அதன் தொடர்ச்சியாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பாக டல்லாஸில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் திருக்குறள் போட்டி அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற போட்டியாகும். வரும் 2013 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் திருக்குறள் போட்டியை டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தியுள்ளனர்.
திருவள்ளுவர் எழுதியது ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்கள்தான் என்றாலும், 200 குழந்தைகள் பங்கேற்கும் போட்டியில், திரும்பத் திரும்ப ஒப்புவிக்கும் போது அதன் எண்ணிக்கை ஐயாயிரம் தடவைக்கு மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டல்லாஸ் தவிர, ஹூஸ்டன், சான் அன்டோனியோ, ஆஸ்டின், டெம்பிள், காலேஜ் ஸ்டேஷன் உள்ளிட்ட பிற டெக்சாஸ் நகரங்களிலிருந்தும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்காக வயது வாரியாக நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவுகளிலிலும் முதல் மூன்று பரிசுகள் தவிர, போனஸாக குழந்தைகள் பிரிவில் முழு விளக்கத்துடன், ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசும் கொடுக்கப்படுகிறது.
இந்த ஆண்டு புதிதாக பெரியவர்களுக்காக, 16 முதல் 25 வயது வரை மற்றும் 26 வயதுக்கு மேற்பட்டோர் என இரண்டு கூடுதல் பிரிவுகளிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியை நடத்துவதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த தன்னார்வ தொண்டர்கள் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தங்களின் பணிநேரம், குடும்ப சுமையையும் தாண்டி, வார இறுதி மட்டுமல்லாமல் வார நாட்களிலும் எந்த வித சன்மானமும் இல்லாமல் பணியாற்றுவது குறிப்பிடத் தக்கது.
திருக்குறள் - திருவள்ளுவர் பேச்சுப் போட்டி
அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும், திருக்குறளைப் படித்து புரிந்து அதன் வழி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி, மேடையில் தமிழில் பேசும் ஆற்றலை வளர்ப்பதற்காக திருக்குற்ள்- திருவள்ளுவர் குறித்த பேச்சுப் போட்டியும் நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, மாலை நடைபெறும் திருவள்ளுவர் விழாவில் உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்படும்.
போட்டி மற்றும் விழா குறித்த மேலதிக தகவல்களை www.pltamil.com இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். [email protected], [email protected] என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.