குவைத்தில் 3,000க்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள் பங்கேற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை
குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக சமுதாயப் பணியாற்றி வரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த நான்காண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இவ்வருடமும் (2015 / 1436) கடந்த வெள்ளிக்கிழமை (17.07.2015 - ஹிஜ்ரீ 1436 ஷவ்வால் பிறை 1) காலை 6:00 மணிக்கு குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள சங்கத்தின் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெற்றன.
அதிகாலை 5:30 மணிக்கே மக்கள் வரத் தொடங்கினர். வருகை தந்த பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் மற்றும் புனித ஜம்ஜம் தண்ணீர் கொடுத்து சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், களப்பணியாளர்களும் வரவேற்றனர். ஆலிம் பெருமக்கள் தக்பீர் சொல்ல, தொழுகைக்கு வந்தவர்களும் தொடர்ந்து தக்பீர் முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்பகுதியே தமிழ் இஸ்லாமிய மக்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
சரியாக காலை 6:10 மணிக்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் திருக்குர்ஆன் விரிவுரையாளர் ‘தமிழ்த் தென்றல்' ஏரல் அ. பீர் முஹம்மது பாகவீ ஹழ்ரத் அவர்கள் (ஃகதீப், ஜாமிவுல் கபீர் பள்ளிவாசல், ஜங்ஷன், திருநெல்வேலி, பொறுப்பாளர், மன்பவுல் ஃகைராத் மகளிர் கல்லூரி, ஏரல், நெல்லை மாவட்டம் மற்றும் ஆசிரியர், சிந்தனைச் சரம் மாத இதழ், மதுரை) அவர்கள் அழகு தமிழில் எளிய நடையில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.
சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 6:50 மணிக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து உரையாற்ற, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார். தொழுகையைத் தொடர்ந்து பெருநாள் ஃகுத்பா பேருரையை நிகழ்த்தினார்.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் யாவும் உருக்கமான பிரார்த்தனை(துஆ)க்குப் பிறகு இனிதே நிறைவுற்றன. துஆ ஓதப்பட்டவுடன் வந்திருந்த பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களின் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். K-Tic ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்பு தொழுகை குறித்தும் மக்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதியுடன் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தினருந்தனர் சங்க நிர்வாகிகள். 300 பெண்கள், 100 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 3,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். குவைத் நாட்டில் தமிழ் மொழியில் பல இடங்களில் பெருநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் K-Tic பள்ளியில்தான் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது வருகை தந்தோரின் பதிவுகள் அமைந்திருந்தது.
பள்ளிவாசலின் உள் பகுதி, வெளிப்பகுதி, மற்றும் பள்ளிவாசலுக்கு வெளியேயும், சுற்றுப்புறத்திலும் மக்கள் தொழுகைக்காக அணிவகுத்து நின்றனர். நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, குளிர்பானம், தேநீர் மற்றும் தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன. முன்னதாக சங்கத்தின் ஆலிம் பெருமக்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டன. ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்வருடம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சிகள், தராவீஹ், தஸ்பீஹ் மற்றும் கியாமுல்லைல் தொழுகைகள், ஈமானிய அமர்வுகள் மற்றும் ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பயனடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/q8tic/videos/vb.365350416872133/923934801013689/?type=2&theater
பதிவிறக்கம் (Download) செய்ய...
19150805/a17869
மேலதிக செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை சங்கத்தின் இணையதளத்திலும், முகநூல் பக்கத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.