ஃபெட்னா 2017: தமிழ் மரபு காக்கும் தமிழ்ப் பேரவை சிறப்பு விருந்தினராக இராஜா கிருஷ்ணமூர்த்தி!
தமிழர் மரபுக்காக்கும் தமிழ்ப்பேரவை விழாவில் உலகத்தமிழர்கள் நலன்களுக்காக தொடர்ந்து பணியாற்றிவரும் காங்கிரசுமேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் அமெரிக்க சனநாயக கட்சியின் காங்கிரசுமேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழர் நலன் குறித்து பேசவுள்ளார்.
இராஜா கிருஷ்ணமூர்த்தி, புதுடெல்லியில் பிறந்தவர். பெற்றோருடன் பஃபலோ நகருக்கு புலம்பெயர்ந்து, இல்லினாய் மாகாணத்தில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
குடியரசுத் தலைவர் ஒபாமா அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். சட்ட ஆலோசனைகளுக்கான அலுவலகம் நடத்திக் கொண்டிருப்பவர். 2016ஆம் ஆண்டு, எட்டாவது வட்ட காங்கிரசு உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
இரண்டரை இலட்சம் பேர் கூடிய தனது காங்கிரசு உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சியில், பெண்கள் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேனென்று சூளுரை மேற்கொண்டார்.
சுகாதாரநலத் திட்டங்கள், குடிவரவுத்திட்டம், புலம்பெயர்ந்தோர் நலவாழ்வு முதலான துறைகளில் நாட்டம் கொண்டு செயற்படுபவர்.
பன்னாட்டுக் கலை, பண்பாட்டுக்கு உரிய முக்கியத்துவம் பேண வேண்டுமெனச் சொல்லிக் களப்பணியாற்றுபவரும், மருத்துவரான தன் மனைவியுடனும் மகன்கள் இருவருடனும் சாம்பர்க், இல்லினாய் நகரில் வசித்துவருபவர் காங்கிரசுமேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி.
அவர் தமிழ்ப்பேரவை விழாவில் கலந்து கொள்வது, தமிழ் மரபுக்காகவும் கலைகளுக்காகவும் எடுக்கப்படுகிற தமிழ்த்திருவிழாவுக்கு சிறப்புச் சேர்க்குமென்பதில் ஐயமில்லை. அவர்தம் அனுபவங்களை நுகர்ந்து சிறப்படைவோம்.