தமிழ்ப் பள்ளிக்கு அமெரிக்கக் கல்வி மாவட்ட அறங்காவலர் பாராட்டு
டல்லாஸ்(யு.எஸ்): ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற ப்ளேனோ கல்வி மாவட்ட அறங்காவலர் மிஸி பின்டர் (PISD Trustee) பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்காவில் இயங்கிவரும் பழமையான தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 14ம் ஆண்டு விழா, ஆறு மணி நேரம் கார்லண்ட் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது.
பள்ளியில் பயிலும் 260 மாணவர்களும் நாடகம், நடனம், பாடல்கள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரங்கத்தில் அசத்தினர்.
ஒரே பள்ளி - இரண்டு விழாக்கள்
அனைத்து மாணவர்களுக்கும் மேடையில் வாய்ப்பு கொடுப்பது என்பதை பள்ளியின் கொள்கையாக கொண்டுள்ளதால், இரண்டு பிரிவுகளாக விழா நடைபெற்றது. 2-30 முதல் 5 மணி வரை மழலை, நிலை 1, 2 மற்றும் மூன்று வகுப்புகளுக்கும். 5.30 மணி முதல் 7.30 வரை நிலை 4, 5, 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கும் தனித் தனி விழாவாக நடத்தப்பட்டது.
குறிப்பாக சிறுவயது குழந்தைகள் அதிக நேரம் இருக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஆசிரியர்கள்
பொதுவாக மாணவர்களே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி விழாவைத் தொடங்கி வைப்பார்கள். இந்த முறை அந்த பெருமையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்ததால், ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி ஆரம்பமானது.
ராஜா சின்ன ரோஜா படத்தில் வருவது போல், மிருகக் காட்சி சாலைக்கு மழலைகள் செல்வது போலவும், குழந்தைகளே வெவ்வேறு மிருகங்களாக தோற்றமளித்து பேசுவது போலவும் நாடகம் நடைபெற்றது.
நடிப்பில் அசத்திய மாணவன்
மாணவர்கள் நடத்திய நாடகம் ஒன்றில் அரசராக நடித்த 1 ம் நிலை சிறுவனின் தமிழ்ப் பேச்சும் உச்சரிப்பும் அனைவரையும் அசர வைத்தது.
முதல் பகுதியில் சிறப்பு விருந்தினராக, தன்னார்வல சேவகர் அவயம் ரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மாணவர்களை வாழ்த்தி பேசிய அவர், இத்தனை திறமைகளுடன், சிறப்பாக தமிழில் பேசி நடித்து வரும் மழலைகளை பார்க்கும் போது, அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி நிச்சயம் தழைத்தோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
14 ஆண்டுகளாக...
14 ஆண்டுகளாக பள்ளியை நடத்திவரும் விசாலாட்சி வேலு, வேலு ராமன் மற்றும் தன்னார்வத்துடன் பணியாற்றும் ஆசிரியர்கள், தொண்டர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவருமே தமிழ் மொழி மீது அளவற்ற பற்றும் பாசமும் கொண்டுள்ளார்கள். அதனாலேயே இத்தனை சிறப்பாக மாணவர்கள் தமிழில் தேர்ச்சியடைந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
ப்ளேனோ ஐஎஸ்டி மிஸி பென்டர்
விழாவின் இரண்டாம் பகுதியில் ப்ளேனோ கல்வி மாவட்ட அறங்காவலர்களில் (Plano ISD Trustee) ஒருவரான மிஸி பென்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆசிரியர்கள், தொண்டர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள், கேடயங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். வணக்கம் என்று அவர் தமிழில் தொடங்கியவுடன் அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
'இத்தனை பேர் தன்னார்வத்துடன் பணியாற்றி, உங்கள் தாய் மொழியை பயிற்றுவிப்பதற்காக 14 ஆண்டுகளாக தனியாக பள்ளி நடத்திவருவது மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
தமிழ்ப் பள்ளிக்கும் உதவுவோம்
ப்ளேனோ பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் வார இறுதியில் இங்கு வந்து தாய்மொழியை கற்றுக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாகும். ப்ளேனோ பள்ளிகளின் கல்வித் திறன் அதிக மதிப்பீடுகளுடன் இருப்பதற்கு இந்த மாணவர்களும் காரணமாகும்.
இந்த விழாவிற்கு என்னை அழைத்து, எனக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். ப்ளேனோ தமிழ்ப் பள்ளி தொடர்ந்து சிறந்த முறையில் இயங்க எனது வாழ்த்துக்கள். கல்வி மாவட்டம் ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க முடியும் என்று கருதினால் தயக்கமில்லாமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இயன்றவரை எப்போதும் செய்து தர தயாராக உள்ளேன்' என்றார்.
ஒபாமா உணவகம் இல்லாத அமெரிக்காவா?
ஊரு விட்டு ஊரு வந்து என்ற நகைச்சுவை நாடகத்தில், அமெரிக்காவில் வளரும் பெண், தமிழ்நாட்டு சித்தப்பா வீட்டிற்கும், தமிழகத்தில் பயிலும் பெண் அமெரிக்கப் பெரியப்பா வீட்டுக்கும் விடுமுறைக்கு வருவது போல் அமைத்திருந்தார்கள். அமெரிக்கா வந்த பெண், ஒபாமா உணவகம் போலாம் வாங்க பெரியப்பா என்று சொன்னவுடன், அவர் மட்டுமல்ல ஆடியன்சும் திரு திரு என்று முழித்தார்கள், அப்புறம் அம்மா உணவகம், அம்மா குடி நீர் என்று அடுக்கிய பிறகு தான் அவருடைய அப்பாவித்தனம் புரிந்தது. தமிழகம் வந்த பெண்ணோ ஆட்டோ முதல் தியேட்டரில் பாலாபிஷேகம் வரை அனைத்தையும் பார்த்து பேஜாராகி விட்டார்.
நாட்டாமை தீர்ப்புடன் நிறைவு
நிலை 7 மற்றும் 8 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற. பிட்சா, பர்கர் சப்பாத்தியா அல்லது இட்லி வடை பொங்கலா என மாறிவரும் உணவுப் பழக்கங்களையும், ரெஸ்டாரண்ட்களையும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கும் நாடகம் நடைபெற்றது.
பஞ்சாயத்திற்கு இரு தரப்பினரும் வருவது போலவும், இறுதியில் நாட்டாமை தீர்ப்பு வழங்குவது போலவும் அமைந்த இந்த நாடகத்தில், கை தேர்ந்த கலைஞர்கள் போல் சிறப்பாக பேசி நடித்திருந்தனர், இந்த குழந்தைகளின் தமிழைக் கேட்ட போது அமெரிக்காவில் தமிழ் மொழி, அழுத்தமாக காலூன்றி விட்டது என்றே தோன்றியது.
விழாவில் ராஜி பிரபாகர் வரவேற்புரை ஆற்றினார். ராஜ் - தீபா தம்பதியினர் தொகுத்து வழங்கினர். சிறப்பு விருந்தினர்களை ஸ்ரீராம் அறிமுகப்படுத்தினார். ஹேமா நன்றியுரை கூறினார்.