தமிழ்ப் பண்பாடு மற்றும் வரலாறு படிக்க வாருங்கள்: அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்கு அழைப்பு!
டல்லாஸ்(யு.எஸ்): உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு பற்றி படிக்க வருமாறு, யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் - ஆஸ்டின் பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சங்கரன், அனைத்து அமெரிக்க தமிழ் மாணவர்களுக்கும், அவர்களிடம் பரிந்துரைத்து அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 9ம் திருக்குறள் - தமிழ்த் திறன் போட்டிகளுக்கான தமிழ் ஆராதனை விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழை மொழியாகவும் பயிலலாம், தமிழ்ப் பண்பாடு வரலாற்று பாடமாகவும் பயிலாலம். யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் -ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப, தனித் தனி பாடத்திட்டம் உருவாக்கி, அவர்களை வழி நடத்தி பயிற்றுவித்து வருவதாக கூறினார்.
அனைவரும் தமிழ் பயிலலாம்
மருத்துவம், பொறியியல், கணிணித்துறை என அனைத்து பிரிவிகளிலும் படிக்கும் இளநிலைப் பட்டதாரி மாணவர்களும் பயிலும் வகையில், தமிழ் மொழி சார்ந்த பல்வேறு பிரிவுகளில் அவர்களுக்கு விருப்பமான பகுதிகளில், பாடத்திட்டங்களை உருவாக்கித் தர தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த பாடத்திற்கும் பல்கலைக் கழகத்தின் மதிப்பீட்டு எண்கள் உண்டு. ஒரு பாடமாவது தமிழ்த் துறையில் பயிலும் மாணவர்கள் தங்கள் மொழி அடையாளத்தை உணர்ந்து கொள்வதை, இத்தனை ஆண்டுகளில் கண்கூடாக பார்த்து வருவதாக தெரிவித்தார்.
அமெரிக்கர்களின் தமிழ் ஆராய்ச்சி
தமிழர்கள் மட்டுமல்லாது, ஏனைய இந்தியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பன்னாட்டைச் சார்ந்தவர்களும் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியும் செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், அங்கு பயின்ற ஒரு அமெரிக்க மாணவர் திருவாசகத்தை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றதையும் தெரிவித்தார். மேலும் தற்போது ஒரு அமெரிக்க மாணவர் ‘ தமிழில் தூது இலக்கியம்' பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகவும் கூறினார்.
பண்டைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஆட்சி செய்து வந்த நிலையில், நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுகளுக்கு தூதுவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். தூதுவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்புகள் ஏராளம் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. அவை இன்றைய காலக் கட்ட அரசு அம்பாசிடர்களுக்கும் பொருந்துவதாக இருப்பது தான் முக்கிய அம்சமாகும்.
தமிழ் மொழியை ப் பயில்பவர்கள் கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும். ஆனால் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வரலாறு போன்றவற்றை ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தார்.
ஒரு குறள் ஒரு டாலர்
திருக்குறள் போட்டியில் 778 குறள்களைச் சொல்லி சீதாவும் 350 குறள்களைப் பொருளுடன் கூறி நந்தினி இளங்கோவனும் சாதனை படைத்துள்ளனர். அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து 13 குழந்தைகள் பரிசு பெற்றனர். மொத்தம் 54 குழந்தைகள் திருக்குறள் போட்டிக்கான 'ஒரு குறள் ஒரு டாலர் பரிசு'மற்றும் சான்றிதழகளும் பெற்றனர்.
அவ்வை அமுதம் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து 32 குழந்தைகள் பரிசு பெற்றனர். ஆத்திச்சூடி 24 , நல்வழி 4. மூதுரை 4 , கொன்றை வேந்தன் 5, தமிழ்க் கட்டுரை 4 , தமிழ்ப் பேச்சு 10 என மொத்தம் 51 பேர் பங்கேற்றனர்.
1330 குறள்கள் சாதனை
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பெரியவர்கள் பிரிவில் 1330 குறள்கள் சொல்லி சாதனைப் படைத்த முனைவர் சித்ரா மகேஷ், பெரியவர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ள சாஸ்தா தமிழ் அறக்கட்டளைக்கும், அனைத்துத் திருக்குறள்களையும் படிக்க முடியும் என்று முன்மாதிரியாக விளங்கும் கீதா அருணாச்சலத்திற்கும் , நன்றி தெரிவித்தார். அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு குறள்களை கற்றுக் கொள்ள, எளிமையான நடையில் உரை எழுத விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சென்னை வெள்ள நிவாரணம்
சென்னை வெள்ளத்தின் போது, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு குழுக்களுடன் இணைந்து பல லட்சம் மதிப்பிலான நிவாரணப் பணிகள் நடைபெற்றது. நிவாரணப்பணி விவரங்களை பாஸ்கர், அருண்குமார், விசாலாட்சி, வேலு ராமன் மற்றும் பழநி சாமி விவரித்தார்கள்.
விசாலாட்சி வேலு வரவேற்புரை ஆற்றினார். கல்பனா ரவிசங்கரின் ஈஸ்வர் நாட்டியாலயா குழுவினரின் சிறப்பு நடனம் இடம்பெற்றது. தமிழ் மொழியின் பழமையும், பெருமையும் ஒருங்கே கலந்து, குழந்தைகளுக்கும் புரியும் வகையில், பழநி சாமி மற்றும் ஜெய்சங்கர் தொகுத்து வழங்கினார்கள்.
டாக்டர் ராஜ் மற்றும் டாக்டர் தீபா, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி , நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர். அண்ணாமலை நன்றி கூறினார். அருண்குமாரின் ஒருங்கிணைப்பில் பல்வேறு குழுக்களாக தன்னார்வத் தொண்டர்கள் போட்டி மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
-இர தினகர்