துபாயில் 'தேசம் மறந்த ஆளுமைகள்' நூல் வெளியீடு
துபாய்: துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தேசம் மறந்த ஆளுமைகள் என்ற நூல் வெளியீட்டு விழா அல் இப்ராகிமி உணவகத்தில் 01.04.2016 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். அமீரகத்தில் கல்விப் பணியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் திருச்சி பைசுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் இருந்து வந்த பிரபல மருத்துவர் அப்துல் லத்தீப் வெளியிட நத்தம் ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார். அவர் தனது உரையில், இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து ராபியா குமரன் என்ற இளைஞர் வெளியிட்டுள்ளார். இன்றைய இளைஞர்கள் தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் குறித்து தெரிந்து கொள்ள இயலாத சூழலில் இது போன்ற நூல்கள் மிகவும் பயனளிக்கும் என்றார்.
இந்த பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராபியா குமரனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நூல் தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்திலும் அறிமுகம் செய்யப்பட்ட வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார். ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வரும் சமூக அமைப்புகள் இந்த பணிக்கு உதவிட முன்வர வேண்டும் என்றார்.
டாக்டர் அப்துல் லத்தீப் ஓய்வு பெற்ற அலாவுதீன் ஐ.ஏ.எஸ். அவர்களின் மூத்த சகோதரர் ஆவார். இந்த விழாவில் கல்வியாளர் பொன். முகைதீன் பிச்சை, பிரபு முகைதீன், தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றி வரும் திருச்சி இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.