துபாய் ஈமான் அமைப்பு தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்: இந்திய துணைத் தூதரக அதிகாரி பங்கேற்பு
துபாயில் ஈமான் அமைப்பு தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
துபாய்: துபாயில் ஈமான் கல்சுரல் சென்டர் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் கலந்துகொண்டார்.
இந்த மருத்துவ முகாம் தும்பே மருத்துவமனை ஒத்துழைப்புடன் துபாய் சோனாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பவர் செக்யூரிட்டி தொழிலாளர் முகாமில் நடைபெற்றது. இதற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார்.
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப்பணிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த முகாமில் இந்திய துணைத் தூதரக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுமதி வாசுதேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் அதிகமான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஹுசைன் அவர்களால் பவர் குழுமம் சிறப்பான வகையில் தொழில் நிறுவனத்தை நடத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த மருத்துவ முகாம் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த முயற்சிகளை மேற்கொண்டு ஈமான் கல்சுரல் சென்டரின் நிர்வாகிகளை பாராட்டினார். இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் பூங்கொத்து கொடுத்து டாக்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பவர் குழும மேலாளர் அமீர், வர்த்தக பிரமுகர் அபுதாகிர் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் ரத்ததானம், புகைபிடித்தலை கைவிடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வினை மேற்கொண்டனர்.
முகாமில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை தர்மபாலன், கஜினி முகம்மது, ஈமான் அமைப்பின் செயலாளர்கள் முதுவை ஹிதாயத், முகைதீன் அப்துல் காதர், பைசுர் ரஹ்மான், இக்பால், சீனி பாவா, சபீகுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.