துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் கூடிய இப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் கூடிய இப்தார் நிகழ்ச்சி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்ற குவைத் பள்ளியில் ரமலான் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த இப்தார் நிகழ்ச்சி துபாய் ப்ரிஜ்முரார் பகுதியில் அமைந்துள்ள லத்தீபா பள்ளிவாசல் மற்றும் துபாய் சலாஹுத்தீன் சாலையில் இருக்கும் ஈடிஏ அஸ்கான் பின்புறம் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்புச் செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் கும்பகோணம் சாதிக்கும், லத்திபா பள்ளிவாசலில் திண்டுக்கல் ஜமால் மைதீனும், ஈடிஏ அஸ்கான் பின்புறம் உள்ள பள்ளிவாசலில் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் தலைமையிலான குழுவினரும் மேற்பார்வை செய்து வருகின்றனர்.
தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் சுவைமிக்க நோன்புக் கஞ்சியை பருகி நோன்பு திறந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கேதசம், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர்.