அமெரிக்காவின் மின்னாபோலிஸ் நகரில் 30வது 'பெட்னா' பேரவை தமிழ்விழா!
அமெரிக்காவின் மின்னாபோலிஸ் நகரில் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை தமிழ்ச்சங்களின் சார்பில் தமிழ்விழா நடைபெறுகிறது.
மின்னாபோலிஸ்: அமெரிக்காவின் மின்னாபோலிஸ் நகரில் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை தமிழ்ச்சங்களின் சார்பில் தமிழ்விழா நடைபெறுகிறது. இதில் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும மினசோட்டத் தமிழ்ச்சங்கம் இணைந்து 30வது பேரவைத் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கயானா பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து, அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா, நடிகை ரோகினி, இயக்குநர் மிஷ்கின், கவிஞர் சுகிர்தராணி, தங்க மகன் மாரியப்பன், ஆய்வாளர் ஒடிஷா பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
ஜூன் 30ஆம் தேதி தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி சிறுகுறு தொழில் முனைவோர் கருந்தரங்கமும் நடைபெறுகிறது. மேலும் உறுப்பினர் தமிழ்ச்சங்கங்கள் முதன்முறையாக பங்கேற்கும் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூலை ஒன்றாம் தேதி மக்களிசை, மரபுக்கலைகள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மருதநாயகம் மரபு நாடகம் நடை பெறவுள்ளளது.
ஜூலை 2ஆம் தேதி மருத்துவ தொடர் கல்வி கருத்தரங்கு நடைபெறுகிறது. உறுப்பினர் சங்கங்களின் பேரணி மற்றும் இளையோருக்கான இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சூப்பர் சிங்கர் பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதி சிறப்பு விருந்தினர்களுடன் இலக்கிய கூட்டம் நடைபெறுகிறது.