தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய நல்லொழுக்க பயிற்சி முகாம்
தம்மாம்: கடந்த வெள்ளியன்று சவுதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா தலைமையில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
தம்மாம் தலைமை நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு கோபார் கிளையின் தலைவர் அபுபக்கர் முன்னிலை வகித்தார்.
இன்றைய சூழலும் சமூக நலப்பணியில் இளைஞர்களின் பங்களிப்பும் குறித்து இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்பு பேருரையாற்றினார்.
ஒவ்வொரு நாளைக்குமான தமது வாழ்வின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட பிற மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் தங்களை கட்டமைப்பது இன்றைய இளைஞர்களின் நல்லொழுக்க வாழ்வுக்கு மிகச்சிறந்த வழியாகும் என குறிப்பிட்டார். பிழைப்பு தேடி சவுதி அரேபியாவுக்கு வந்து பல்வேறு வகையில் பாதிக்கப்படும் இந்தியர்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து கொள்ளும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தில் இளைஞர்கள் தங்களை இணைத்து கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.
போதை தரும் மது, பான்பராக், ஹான்ஸ் போன்றவற்றிற்கு அடிமையாகிப் போன இளைஞர்களை நல் வழிபடுத்தும் வகையில் தாயகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள சமூக நல ஆர்வம் உள்ள இளைஞர்கள் முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அவரவர் இறைவனை வணங்கி வாழ்வதும், எளியோருக்கு வழங்கி வாழ்வதும், அனைவரோடும் இணங்கி வாழ்வதும் தான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கான நல்லொழுக்க பண்பாடாகும். இத்தகைய பண்புகளை முன்னெடுத்து செல்வதே இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உயரிய கோட்பாடு என்பதால் சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்கள் இந்தியன் சோஷியல் ஃபோரத்தில் தங்களை இணைத்து கொண்டு சமூக நலப் பணியில் ஈடுபடுமாறு கீழை ஜஹாங்கீர் அரூஸி அழைப்பு விடுத்தார்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் காயல் அபுபக்கர் கீழ்க்கண்ட தீர்மானங்களை வாசித்தார்.
தீர்மானம்: 1) தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பலியானோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடவும், விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கிடவும், வீடிழந்தோருக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து வீடு கட்டி கொடுக்கவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 2) சவுதி அரேபியாவில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் பிரதி வியாழன், வெள்ளி, சனிக்கிழமை போன்ற நாட்களில் இரவு 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை ஆலோசனைகளும் அதற்கான உதவிகளையும் செய்வதென்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 3) பாதிப்புக்குள்ளாகும் தமிழர்கள் மேற்கண்ட நாட்களில் மேற்கண்ட நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது.
பயிற்சி முகாம் நிறைவாக கோபார் கிளை தலைவர் அதிரை அபுபக்கர் நன்றி கூறினார். கூட்டத்தில் சிஹாத், கோபார், தம்மாம் பகுதிகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.