அபுதாபியில் அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபியில் ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி அய்மான் சங்கம் சார்பில் ருச்சி உணவக ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன், பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் முஹம்மது இத்ரீஸ் மரைக்காயர் இறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரையாற்ற, சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சியை பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். அதிரை கவியன்பன் கலாம் சிறப்பு கவிதைகளை வாசித்தார்.
அய்மான் சங்கத்தின் கீழை சையது ஜாஃபர் திருச்சியில் இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நடப்பறிக்கை நிகழ்த்த, ஹிஜ்ரா வரலாற்றை காயல் ஹுசைன் மக்கீ ஆலிம் மஹ்ழரி ஹள்ரத் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமானியும், சென்னையில் இயங்கி வரும் இக்ராஃ அகாடமியின் நிறுவனருமான கேப்டன் மத்தீன் ரப்பானி சிறப்புரையாற்றினார்.
எஸ் - ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குனரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியரும், முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளருமான பேராசிரியர், முனைவர் சேமுமு முஹம்மது அலி கல்வி- ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் அவசியத்தை குறித்து விளக்கி நிறைவு பேருரையாற்றினார்.
அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றியுரை நிகழ்த்த, ஷர்ஃபுத்தீன் மன்பஈ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், இந்திய முஸ்லிம் பேரவை (ஐஎம்எப்), அமீரக காயிதே மில்லத் பேரவை, மௌலிது கமிட்டி ஆகியவற்றின் நிர்வாகிகளும், பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினரும், சமீபத்தில் சிறந்த தமிழ் அறிஞருக்கான தமிழக அரசின் உமறுப்புலவர் விருது பெற்ற முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலிக்கு அய்மான் சங்க நிர்வாகிகள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான கீழை ஜமால், திருவாடுதுறை அன்சாரி பாட்ஷா, காயல் ஷேக்னா, காயல் அன்சாரி, களமருதூர் ஷர்ஃபுத்தீன், லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மன்பஈ, ஆடுதுறை அப்துல் காதர், நாகூர் ரஷீத் மரைக்காயர், லால்பேட்டை சல்மான், காயல் லெப்பை தம்பி, கீழை ஃபஹ்ருல் பையாஜ், லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.