துபாயில் ஆன்மீக சொற்பொழிவு: 'இஸ்லாம் டைரி' ஆசிரியர் சிறப்புரை
துபாய்: 'இஸ்லாம் டைரி' மாத இதழ் பத்திரிக்கை ஆசிரியர் திண்டுக்கல் அல்லாமா ஆரிஃப்பில்லாஹ் காஜா முஹ்யித்தீன் அவர்கள் 05-11-2004 அன்று இரவு 9.00 மணியளவில் துபாய் இ.டி.ஏ. 'டி' பிளாக்கில் இஸ்லாமிய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நபிகள் நாயகம் அவர்களால் அவர்கள் தோழர்களுக்கும், அவர்கள் வழியே இறை நேசர்களுக்கும், உணர்வு பூர்வமாக விளக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்றும், அதன்படி செயல்படுவதில் தான் நிம்மதியும், வெற்றியும் உள்ளது என்றும் சரித்திர சான்றுகளுடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மனிதன் உயிர், உடல், உள்ளம், உணர்வு மற்றும் சிந்தனையினால் ஆக்கப்பட்டவன் என்றும், இதில் கண்ணுக்குத் தெரிந்தது உடல் மட்டுமே என்றும், மனித செயல்களுக்குக் காரணமான உள்ளம், உணர்வு மற்றும் சிந்தனையை இறை நம்பிக்கையால் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்த கீழக்கரை தைக்கா ஒஃபூர், ஈஸா முஹ்யித்தீன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் காஜா முஹ்யித்தீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.