அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 68வது நிறுவன தின கருத்தரங்கம்
அபுதாபி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 68வது நிறுவன தின கருத்தரங்கம் அபுதாபியில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் தாய்ச்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 68வது நிறுவன தினத்தை முன்னிட்டு அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் நிறுவன தின கருத்தரங்கம் அபுதாபியில் எழுச்சியுடன் நடைபெற்றது.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி இல்லத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு பேரவையின் துணை தலைவர் கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் தலைமை வகித்தார். அமீரக தொழிலதிபர் லால்பேட்டை முஹம்மது அலி முன்னிலை வகித்தார். மானியம் ஆடூர் மௌலவி இல்யாஸ் ஃபாஜில் மன்பஈ இறைமறை வசனங்களை ஓதினார்.
பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஷாஹுல் ஹமீத் வரவேற்புறையாற்ற, அதிரை கவியன்பன் கலாம் தாய்ச்சபையைப் பற்றி கவிதை வாசித்தார். பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் அறிமுகவுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமை நிலைய பேச்சாளர் லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் துவக்கவுரை நிகழ்த்தினார். அய்மான் சங்க பொதுச்செயலாளர்
எஸ்.ஏ.சி. ஹமீத், மௌலவி ஹுசைன் மக்கீ ஆலிம், பாரதி நட்புக்காக கலீல், அதிரை காதர் மைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த தொழிலதிபர் கனியூர் மௌலவி இஸ்மாயில் நாஜி, நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் பொதுச் செயலாளர் எஸ்கொயர் சாதிக், தொழிலதிபர் கும்பகோணம் ஜர்ஜிஸ் ஆகியோரின் கருத்துரைகள் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது. இவர்களோடு நீடூரைச் சார்ந்த முஹம்மது இக்பால், நஜீர் அஹ்மத் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பேரவையின் பொருளாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர்ரஹ்மான் தாய்ச்சபையின் கொள்கை கோட்பாடுகளைப் பற்றியும், அதன் செயல்பாடுகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.
பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி நன்றியுரை நிகழ்த்த அபுதாபி காயல்பட்டினம் ஜமாஅத் தலைவர் மௌலவி ஹபீபுர்ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது.
இக்கருத்தரங்கில் அமீரக காயிதே மில்லத் பேரவையினர், அய்மான் சங்கத்தினர், பல்வேறு ஊர்ஜமாஅத்தினர்கள், சமுதாயப் பிரமுகர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர். கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.