காளையை அடக்கட்டும்.. அப்பத்தான் அவனுக்கு நீ... ஜல்லிக்கட்டு (3)
எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது 3வது அத்தியாயம்.
- லதா சரவணன்
ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. தைத்திருநாள் பிறக்கப்போகிறது. வீடுகளுக்கு வெள்ளையடித்து, புதுத்துணியுடுத்தி பொங்கல் சமைத்து கருப்புப்படையல் இட்டு என எல்லாரும் அவரவர் வீட்டுப் பணிகளில் மும்முரமாய் இருக்க, பண்ணையார் எண்ணெயில் இட்ட பட்சணமாய் கொதித்துக் கொண்டு இருந்தார். காலையில் வரை பெண்ணிற்கு பட்டும், நகையும் தேர்ந்தெடுத்து தைநாளில் உடுத்தி அழகு பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர். இப்போது தீயை மிதித்ததைப் போல அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது கண்டு ரோஜாவின் தாய்க்கும் கலக்கமாகத்தான் இருந்தது?! கணவரின் கோபம் அறிந்தவராயிற்றே அவரிடம் பேசக்கூட பயமாய் இருந்தது. அப்பாவைப்பற்றி நன்கு தெரிந்தும் இந்த பெண் ஏன் இப்படி பண்ணிட்டது. மெல்ல பேசிப்பார்த்தாள்.
ஊரே கையெடுத்து வணங்கும் மனிதரின் மகள் தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவனை விரும்பினால் அவரின் கெளரவம் என்னாவது ? இப்போ என்னங்க பண்றது. நான் வேண்டுமானால் அவகிட்டே பேசிப்பார்க்கவா.,.. ?!
வேண்டாம் மரகதம் பேசுவதால் அடிப்பதால் அவளின் வைராக்கியம் தான் அதிகமாகும், அது நமக்கு நல்லது அல்ல. அவ வயசு அப்படி, நம்ம மேலத்தெரு முனுசாமியோட பொண்ணு இது மாதிரி விஷயத்திலே அவன் அப்பனையே எதிர்த்து ஓடிப்போச்சு அப்படியேதாவது நடந்திட்டா நான் வெளியே தலைகாட்ட முடியாது. இதை வேறுவிதமாகத்தான் கையாள வேண்டும். நான் முடிவு செய்துவிட்டேன் என்ன செய்வது என்று ?! தன் திட்டத்தை மனைவியிடம் விரிவாக விளக்கத் துவங்கினார் பண்ணையார்.
நல்ல யோசனைதான்தாங்க ஆனா .... கணவரின் முறைப்பிற்கு பயந்து நான் இப்பவே ரோஜாவைக் கூப்பிடறேன்.
கட்டியிருந்த புடவையின் நுனியை சுற்றிச் சுற்றிப் பிரித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா. அப்பாவிற்கு இத்தனை சீக்கிரம் விஷயம் தெரியும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை, எப்படியும் ஒரு நாள் தெரியப்போவதுதான் என்றாலும், அவர் நல்ல மூடில் இருக்கும் போது சொல்லுவோம் என்று நினைத்திருந்தாள், ஆனால் .... இப்போது எப்படி பாண்டியிடம் தைரியமாக சொல்லியபோதும், அப்பாவின் முன் பேசிட நாக்கு எழவே இல்லை. தொண்டைச் செறிமிக்கொண்டே அவர் பேச ஆரம்பித்தார்.
நான் விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன் ரோஜா. முதல்ல எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ எந்த தவறும் செய்யமாட்டேன்னு.... பாண்டி நல்லபையன்தான். என்ன நம்ம கிட்டே கைநீட்டி சம்பளம் வாங்குறவன் சொல்லிக்கிறாமாதிரி எந்த சொத்தும் இல்லை, இவன்தான் என் மருமகன்னு நாளைக்கு ஊருக்குள்ளே சொன்னா என் மானம் போவது உறுதி, சற்று நிறுத்திவிட்டு பேச்சைத் துவங்கினார். அதற்குள் ரோஜாவின் இதயம் ஏகத்திற்கும் துடித்தது.
அதிலேயும் அவன் நம்ம வீட்டுலேயே இருக்கிறவன்........! திடீர்னு உனக்கும் அவனுக்கும் கல்யாணமின்னு சொன்னா சின்னஞ்சிறுசுங்க என்ன தப்பு பண்ணினாங்களோ அதுதான் பண்ணையார் காதுங்காதும் வைச்சாமாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டாருன்னு பேசிடுவாங்க, ஊரு வாய மூட முடியாது. நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன் நீ அதுக்கு கட்டுப்படுவேன்னு நினைக்கிறேன்
அப்பா நான் ....
இரும்மா நான் இன்னும் பேசி முடிக்கலை, நாளை மறுநாள் நடக்கப்போற நம்ம ஜல்லிக்கட்டுலே பாண்டி கலந்துகிட்டு நம்ம காளையை அடக்கட்டும், நம்ம காளை அடக்கிறவனுக்கு பணமுடிப்போட அவன் வீரத்தை மெச்சி என் பொண்ணை கல்யாணம் செய்து தர்றதா சொல்லிடறேன். அப்ப யாரும் எதுவும் பேசவும் மாட்டாங்க. சொன்னபடி மாட்டை அடக்கிட்டா நானே உன்னை கல்யாணம் பண்ணித்தர்றேன். இது என் கெளரவ பிரச்சனை பாப்பா. என் மருமகன் பணக்காரன்ங்கிறதைவிட வீரன்னு சொல்லிக்க நான் பெருமைப்படறேன் உன்னைப் பெத்ததுக்கு அந்த பெருமையாவது எனக்கு கொடும்மா
அப்பா அவர் உயிருக்கு ஏதாவது ?
பெரிய இடத்துப்பொண்ணை கல்யாணம் செய்துக்கணுமின்னு ஆசையிருந்தா மட்டும் போதாது. அதுக்குரிய தகுதி வேண்டாமா ? அவன் வீரன்னும், உன் மேல எத்தனை ஆசை வைச்சிருக்கான்னும் இதிலே தெரிந்திடுமே. பயந்தாங்குளியா இருந்தா போட்டியிலே சேரவே மாட்டான். உம்மேல உண்மையான அன்பு வைச்சிருக்கானா இல்லை பணத்துக்காக காதலிக்கிறாமாதிரி நடிக்கிறானான்னு இதுலே தெரிஞ்சுபோயிடும். என்ன சொல்ற ? என்ன சொல்வாள் ?! வேண்டாம் என்றால் தன் காதலே பொய் என்றுதானே அப்பா பூடகமாக சொல்லுகிறார். ஆனால் போட்டியில் தவறுதலாக ஏதாவது ஆகிவிட்டால்,,, குழம்பிய அவள் மனதை படம் பிடித்தபடியே,, அவசரம் இல்லை ரோஜா.... நீ அவன்கிட்டே பேசிட்டு சொல்லு தலையைத் தடவி பாசமாய் அனுப்பிவைத்தார்.
என்னங்க நீங்க அவளைக் கூப்பிட்டு ஒரு நாலு அறையாவது விட்டுட்டு இதைப்பற்றி பேசியிருக்கலாம்.
விடு பிரச்சனையை தீர்க்கத்தான் பார்க்கணும் வளர்க்க இல்லை போ வேலையைப் பாரு....?! அவள் ஒருமுறை நொடித்துவிட்டு சென்றுவிட்டாள். பண்ணையார் சொக்கனை அழைத்துவர ஆளனுப்பினார்.
(தொடரும்)