சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா
சிங்கப்பூர்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா 22-11-2015 அன்று சிங்கப்பூரில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கல்வியைக் கருப்பொருளாய் கொண்டு நிகழ்ந்த இவ்விழாவில், மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சிப் படைப்பாளர், வழக்குரைஞர் திரு எஸ். பாண்டித்துரை "கற்க கசடற" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூகப் பணிகளை செய்து வரும் இச்சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டு, அதன் முதல் பிரதியை எம்.இ.எஸ். குழுமத்தின் தலைமை நிர்வாகி திரு எஸ். எம். அப்துல் ஜலீல் பெற்றுக் கொண்டார்.
"பயங்கரவாத மிரட்டல்களை எதிர்நோக்கும் இன்றைய சூழ்நிலையில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட்டு, சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும்" என்று தனது வரவேற்புரையில் கேட்டுக் கொண்டார், சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர், டாக்டர் திரு காதர்.
ஜமால் முஹம்மது கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். முஹம்மது சாலிஹ் தலைமையில், கல்லூரியின் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜீமுதீன், துணைச் செயலாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஏ. முஹம்மது இப்ராஹீம், கூடுதல் துணை முதல்வர் டாக்டர் எஸ். இஸ்மாயில் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் நாகூர் ரூமி எழுதிய கல்லூரியைப் பற்றிய சிறப்புப் பாடலை "நூருல் ஹுதா" இசைக்குழுவினர் வழங்கியது செவிகளுக்கு விருந்தாக அமைந்திருந்தது.