"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (11)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 11வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
"ஏற்கனவே கொடுத்துவிட்ட வாக்கை மீறுவதெப்படி?"
"எதுவும் மறுரிசீலனைக்கு உரியதே?"
"சத்தியம் கூடவா ?"
"அதர்மத்திற்கு அளித்துவிட்ட வாக்கு சத்தியம் ஆகாது! உன் சொற்படி பார்த்தாலும் நீ அமாவாசை அன்றுதானே பலியாகிட வேண்டும் என்று துரியோதனுக்கு வாக்கு அளித்தாய்.?!"
"ஆமாம்.."
"அதனால் அமாவாசையை வேறு தினத்திற்கு அதாவது முன்கூட்டி வர ஏற்பாடு செய்திருக்கிறேன் .. தர்மத்திற்கு நீ தலை கொடுப்பாயா?" அரவான்
"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கு எடுத்துக்காட்டாய், அரவானும் கிருஷ்ணர் கூறிய விஷயங்களை ஒத்துக்கொண்டதோடு, தருவேன் நிச்சயம் ...! "என்றான்
வெட்டருவா மீசை, உறுதியான தோள்கள், தேக்குமரத் தேகம், கம்பீரத் தோற்றம், முப்பத்திரண்டு லட்சணங்களும் பொருந்திய ஒரு வாலிபன் உலகின் எந்தவொரு சுகத்தையும் அனுபவிக்காமலே அற்ப ஆயுசான இறந்துவிடப் போகிறேனா என்ற வேதனை
கிருஷ்ணருக்கு இருந்தது.
எனவே...! அரவானிடம். "உனக்கு இறுதி ஆசை ஏதாவது இருந்தால் சொல்! அதை நான் நிறைவேற்றித் தருகிறேன்?" என்றார்.
"ஆம்! எனக்கு ஒரேயொரு ஆசை இருக்கிறது. இறப்பதற்குள் ஒரு திருமணம் செய்து பார்க்க வேண்டும்" என்றான். அவனின் ஆசையைக் கேட்டு அதிர்ந்து போனார் கிருஷ்ணர். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. எனினும், "சரி"! என்றார்.
ஆனால் தேவர் லோகம், நாகலோகம் என எல்லா லோகத்திலும் அரவானுக்குப் பெண் கொடுக்க யாருமே முன்வரவில்லை, நாளை சாகப்போகிற ஒருவனுக்கு யார் பெண் கொடுக்க முன்வருவார்கள். அதனால் கிருஷ்ணர் தானே ஓர் அழகிய
பெண்ணாக வடிவம் கொண்டு அரவானை மணந்து அவன் ஆசையை நிறைவேற்றிட முன்வந்தார்.
அதன்பின் அவர்களின் திருமணமும் நடந்தது, அரவானின் தலை பாண்டவர்களுக்கு எனத் தரப்பட்டது. அரவான் இறந்த பின், ஒரு கணவனின் இறப்பில் மனைவியானவள் எவ்வித சடங்குகளுக்கு ஆளாவோளோ அதே போல் கிருஷ்ணன் தாலியறுத்து சடங்கு மேற்கொண்டார். அரவானின் சிரம் சொன்ன கதையென்று ஒரு பாடலோடு அந்த கதையும் முடிந்தது. பாரதப்போரில் பாண்டவர்களே வென்றனர்.
நாடகம் முடிந்தது. அரவான் வேடத்தைக் கலைக்காமலே மீனாட்சி மேடையில் உரையாற்றினாள்.
வணக்கம்...
"இந்த வரலாற்றுச் சான்றில் நான் இக்கதையைத் தேர்வு செய்யக் காரணமே புரட்டப்படாதவர்களின் புண்ணியச் சிறகுகளை சில புல்லுருவிகள் பிய்த்து எறிந்ததுதான் ! ஆம் ஒரு விநாடி இந்த கிளிப்பிங்ஸைப் பாருங்கள்." திரை விரிந்தது.
"சில திருநங்கைகள் படும் அவலங்கள் அதில் இருந்தது , அவர்கள் கடைகேட்டலும், ஆண்கள் பொது இடம் என்றும் பாராமல் கேலி செய்வதும், கற்கள் கொண்டு அடிப்பதும், காண்பிக்கப்பட்டன."
"இங்கே நீங்கள் பார்த்தவை எல்லாம் அன்றாடம் நாம் சந்திப்பது ? குடும்பம் சமூகம் என எல்லாராலும் புறந்தள்ளப்பட்டவர்கள் இவர்கள். பெண்களுக்கு ஒரு அநீதி என்றால் சங்கங்கள் திரளுகின்றன. ஆனால், இவர்களுக்கு? மனிதம் மறுக்கப்பட்டு கரடு முரடான முள்பாதையில் சங்கமிக்கும் வாசமில்லா மல்லிகளின் குரலாய் இது இருக்கும் என்று நம்புகிறேன்? அநாதையாய் விரட்டப்பட்டு பிழைப்பிற்காக எத்தனையோ இன்னல்களை சந்திக்கும் அவலம் நாம் கண்கூடாய்க் காண்கிறோம்., ஊனமுற்றவர்களைப் போல் தான் இவர்களும்,!"
"உச்!" எனப்படும் அப்பரிதாபமான சொல் கூட இவர்களுக்கு இல்லை, எய்ட்ஸ் நோயாளிகளைக் கூட நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால், இவர்களை விரட்டிடுவோம். பொது இடங்களில் நடமாடும் சமயம் வெறித்துப் பார்ப்பது, சீட்டியடிப்பது, கல்கொண்டு எரிவது கெட்ட வார்த்தைகளால் ஏசுவது என எத்தனை துன்புறுத்த இயலுமோ அத்தனை துன்புறுத்தி வருகிறோம்."
"நாகரீகம் என்பது நமக்குள் மட்டுமல்ல பிறரிடத்திலும் தான் உணர வேண்டும். அவர்களும் மனிதர்கள்தானே? ஐந்தறிவு உள்ள உயிரினம் போல நினைத்ததை வெளியே சொல்ல இயலாமல் எனக்கு ஏனிந்த நிலை என்று ஏங்கி மனம் வெறுத்து உடலும் மனமும் புண்ணாகி தவிப்பவர்களை நாம் காப்பாற்ற முன்வரவில்லையென்றாலும் காயப்படுத்தாமல் இருக்கலாம். இந்த நாடகமும் அவர்களுக்கு சமர்ப்பணமே! .,. இந்த அரவானைத்தான் அவர்கள் மணமகளாய் எண்ணி கூவாகத்தில் விழா எடுக்கிறார்கள். இந்த நாடகம் போடப் போகிறேன் என்று தெரிந்தபோது சக மாணவர்கள் கூட என்னை கேலி பேசி ஏளனப்பார்வை பார்த்தனர். அவர்களுக்கு என் தாழ்மையான கருத்து, என் செயல் ஆக்கப்பூர்வமானது."
"அதற்கு உங்கள் ஆதரவுகளை மட்டுமல்ல மாற்றங்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி!" அவள் பேசி முடித்தபிறகு அரங்கமே அமைதியாய் இருக்க, அடுத்த நாடகங்கள் எல்லாம் நடந்தேறியது. அவையில் வீற்றிருந்த ஈஸ்வரின் கண்கள் மட்டும் அவளையே வியப்பாய் பார்த்தன. பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. ஈஸ்வரைப் பேச அழைத்தனர்,
"நடைபெற்ற அனைத்து வரலாற்று நாடகங்களுமே நன்றாய் இருந்தது. ஆனால், மற்ற எல்லா நாடகங்களையும் நாம் புராணமாக கதைகளாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மிஸ். மீனாட்சி சொல்லிய கருத்துக்களும், அவரின்
கதைக் களமும், புதியது, இதுவரையில் யாராலும் உரக்கப் பேசப்படாதது. ஒரு புது யுக்தியை கையிலெடுத்து அதனால் பலரும் நன்மைய¨டைய வேண்டும் என்று ஒரு சர்ச்சையான விஷயத்தை செய்து இருக்காங்க. மீனாட்சி கொஞ்சம் மேடைக்கு வரவும்..! அவள் வந்ததும் மீனாட்சியின் கையைப் பற்றிக் குலுக்கினான்.
(தொடரும்)