"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (8)
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 8வது அத்தியாயம் இது.
- லதா சரவணன்
"பார்றா.....! கடைசியில் என்னை வில்லன் ஆக்குறதை? அப்போ நீ சின்னப் பப்பா தப்பான முடிவு எடுக்கக் கூடாது பாரு அதான".தோழியின் தலையில் செல்லமாய் குட்டியபடி காபிக் குண்டான பணத்தைத் தந்து விட்டு இடத்தை காலி செய்தனர் இருவரும்.
மீனு என்கிற மீனாட்சி 23 வயது அழகி, கண்களை உறுத்தாத கவரும் அழகு, அவளுடையது, பால் போன்ற வெளுத்த சருமம், மீன் போன்ற விழிகள், கூர்நாசி, கிள்ளத் தூண்டும் கன்னக்கதுப்புகள், நேர் பல்வரிசை கொண்டு அவளின் சிரிப்பை காணும் எவரும் தடுமாறுவது நிஜம்.
ரத்னா அவளின் நெருங்கியதோழி இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசிப்பவர்கள். சிறுவயது முதலே அவர்களுக்குள் எழுந்த ஒற்றுமை இன்று வரையில் தொடர்ந்து வருகிறது. பாகுபாடு பார்க்காமல பழகும் குணாதிசயம் கொண்டவர்கள். இரு குடும்பத்தினரும். மீனாவின் தந்தையும், ரத்னாவின் தந்தையும் ஒரே நேரத்தில்தான் பூந்தமல்லியில் பிளாட் வாங்கினார்கள. அப்போது அங்கே நகரம் ஏற்பட்டு இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குடிசைகள், சிறு கல்வீடுகள் முளைத்திருந்தன. முதலில் குடிவந்தது ரத்னாவின் குடும்பம்தான் மில் ஒன்றில் மேனேஜராய் பணிபுரிந்து வந்தார் ரத்னாவின் தந்தை. உள்ளூரில் வீடு வாங்கும் அளவிற்கு சக்தியில்லை, ஆபிஸில் லோன் போட்டு நகை நட்டு எல்லாம் விற்று இங்கு இடத்தை வாங்கி விட்டார். வீட்டிற்கு குடிவந்த போதிலும், திருப்தியைம் மீறி, சுற்றிலும் இருந்த தனிமை சற்று மிரட்டிடத்தான் செய்தது.
கணவர் அலுவல் சென்றபின் பயந்துபயந்து காலங்கழித்த ரத்னாவின் அன்னை செல்விக்கு உற்ற துணையென வந்தவர்கள்தான் மீனாட்சியின் குடும்பத்தினர். நல்ல குடும்பம், தங்களைப்போலவே நடுத்தரக் குடும்பத்தினர் என்பதால் செல்விக்கும் பழகிட ஏதுவாய்ப் போனது. மீனாவின் தாய் கலைவாணியும் செல்வியும் நெருங்கியத் தோழிகளாயினர். அதே போல் ரத்னாவிற்கு மீனா கிடைத்தாள். பெண்களுக்கு ஒரு துணை கிடைத்த திருப்தியில் ஆண்கள் இருவரும் நிம்மதியாக வேலைக்குச் செல்லத் துவங்கினார்கள். பள்ளி செல்வதில் இருந்து கல்லூரி, நூலகம், பொழுது போக்கு எல்லாமே இருவருக்கும் ஒன்றாகிப் போனது.
இருவரும் ஒன்றாய் வரலாறு பாடம் எடுத்தார்கள். அதன்பிறகு M.A History படித்ததும் PHDயில் இணைந்தார்கள் , வரலாற்று மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு அதில் ஆறுமாத கால பிராஜெக்ட் - ஆக ரத்னா-மீனாட்சி எடுத்தது திருநங்கைகள் பற்றிய ஆய்வுதான்.
"ரத்னா கூட முதலில் இது வேண்டுமா மீனு? சர்ச்சைக்குரிய விஷயம் மற்றவர்களைப் போல நாமும் ஏன் இலக்கியம், தமிழ் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது."
"எல்லாரும் செய்யறதை நாமயேன் செய்யணும் ரத்னா. நமக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணும். தவிரவும், நம்மாலே அவங்களுக்கு ஒரு நல்லது நடக்கணும். நான் ஏற்கனவே உன்கிட்டே சொன்னேனே?"
"ஒருமுறை அப்பா கூட வடமாநிலம் போய் இருந்த போதுதான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அப்போ எனக்கு 13 வயசு ட்ரைனில் போயிட்டு இருந்தப்போ எனக்கு எதிரிவ் ஒரு பெண்! அவளை முழுமையான பெண் என்று சொல்லிட முடியாது. உடையும் நளினமும் மட்டுமே பெண் என்றது. அங்கு உள்ள இளைஞர்கள் எல்லாரும் தேவையில்லாமல் அவளை சீண்டினார்கள். அசிங்கமாய் பேசினார்கள். ஆனால், அவளோ அமைதியாய் இருந்தாள். டிக்கெட் பரிசோதகர் வந்திட எல்லாரும் ஏதோ குசுகுசுத்தனர்.
அவரும் வந்து அந்தப்பெண்ணை இறங்கிடச் சொல்லி வற்புறுத்திட அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்தது. அவளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். இறுதியில் அவர்களின் பேச்சு கொச்சையாய் போகவே, வேதனையோடு இறங்கினாள்."
"கீழிறிங்கிய அந்த பெண்ணின் காலில் வணங்கிய ஒரு சிலர் தன் இளம் குழந்தையைக் காட்டி ஆசிர்வதிக்கும்படி கேட்க, எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.
அப்போதான் அப்பா அவர்களைப் பற்றி சொன்னார். அவர்கள் எல்லாம் திருநங்கைகள் என்று. பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதே அளவு உள்ள மூன்றாம் பாலினம். உனக்கு இதைப்பற்றி இப்போது புரியாது. இங்கே அவர்களை தெய்வமாய்ப் பார்ப்பார்கள். அவர்கள் ஆசிர்வதித்தால் கடவுளே ஆசீர்வதிப்பதைப் போல்,,,,,,,,,!'
"அப்போ ஏன் டிரைனில் எல்லாம் கிண்டல் பண்றாங்கப்பா?"
"கோவிலில் கூட கடவுளுக்கு விமர்சனங்கள் நடக்கும் இல்லையா? நன்மையும் தீமையும் உடனேயே புரியாதுடா தங்கம். காலம் அதை உணர்த்தும்."
"அப்பவே எனக்கு அவங்களைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரஸ்ட் இருந்தது. நம்ம ஊருக்கு வந்த பிறகு எப்பவாவது சில நேரங்களில் திருநங்கைகளை சந்திப்பது உண்டு. ஆனா வடமாநிலங்களைக் காட்டிலும் இங்கே அவங்க ரொம்பவும் கேவலமா நடத்தப்படறாங்க.ஏதோ பார்க்கக் கூடாததைப் பார்த்தது போல் ஒதுங்கிப்போறதும், கல்லெடுத்து அடிக்கிறதும், அசிங்கமான கமெண்ட் அடிச்சி கண்ட இடத்தில் தட்டறதும், ச்சீ, ரொம்பவும் தப்பு ரத்னா இதெல்லாம் ?!"
"கொஞ்சம் யோசி நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத யாரோ ஒருத்தர் டீவியிலோ, அல்லது பத்திரிகையிலோ இறந்ததாகவோ... கேள்விப்பட்டால் ஒரு நிமிஷமானாலும், மனசு வருத்தப்படறோம். ஆனா நம்மையும் அறியாமல் கண்ணுக்கு எதிர்க்க, ஆதரிக்க ஆளில்லாம திரியும் இவங்களிடம் எப்படி நடக்கறோம் தப்பு இல்லே இது?!"
"மீனா நீ பேசறது கரெக்ட். ஆனா இவங்க எல்லாம் என்ன நேரத்தில் எப்படி டரீட் பண்ணுவாங்கன்னு தெரியாது? திடீர்னு அசிங்கமா ஏதாவது பேசிட்டா தாங்க
முடியாது."
"அப்படி சொல்லமுடியாது ரத்னா. அடிமனசிலே அவங்க அன்புக்க ஏங்கிட்டு இருக்காங்க. பூனை கூட விரட்டுறவங்களை எதிர்க்கும் தங்களிடம் எல்லை மீறுபவர்களிடம் வேறு வழியில்லாம தவறா நடக்கிறாங்க? பேசுறாங்க? நீ வளர்க்கும் புறா கூட முதலில் நீ அருகில் போகும்போது மிரண்டு பின்வாங்கலையா? நாம் அவர்களை நெருங்கும்போது பயம், அச்சம், கோபமின்னு, நல்லதுகெட்டதுன்னு யோசிக்க முடியாமல்?! யாரையும் கிட்டே நெருங்க விடுவதில்லை......"
'அப்போ அவங்களைப் பற்றி எழுதுவதா முடிவே பண்ணிட்டியா ?'
"ம்.... ஆராய்ச்சிங்கிறே பேரில் புதைந்ததை தோண்டுவதும், இல்லாததை தேடுவதையும்விட, மனமும், உடலும் ரணமாய் ரத்தமும், தசையும் உள்ள மனிதர்களுக்காக நான் ஏதாவது செய்யணும் என்று என்று நினைக்கிறேன். இது என்னால் செய்யமுடிந்த ஒரு சிறு உதவி அவ்வளோதான்."
(தொடரும்)