துபாயில் நடைபெற்ற 'அருவி' சிறப்புக் கவியரங்கம்
துபாய்: துபாயில் தமிழ்த்தேர் நண்பர்கள் இலக்கியச் சந்திப்பு 3.10.2014 அன்று காலை 10.00 மணி அளவில் துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது. அமீரக செய்தியாளர் திரு. முதுவை ஹிதாயத் அவர்களின் தாயார் திருமதி. மூமினா பேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிஞர் ஜியாவுதீன் வரவேற்றார்.
கவிஞர் காவிரிமைந்தன் தொகுப்புரை வழங்கிட கவியரங்கத் தலைமை ஏற்ற கவிஞர் ராம்விக்டர் அவர்கள் அருவி எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இணையதளம் வாயிலாக பெறப்பட்ட கவிதைகள் வரிசையில் மஸ்கட் பஷீர் அவர்களது கவிதையை முதுவை ஹிதயத்துல்லாவும், ஹைதராபாத் ஜெயஸ்ரீசங்கர் கவிதையை புதுவை மு.ரமணியும், இலங்கை ஆர்.எஸ்.கலாவின் கவிதையை அப்துல்லாவும், திருமதி. ஜெயாபழனி கவிதையை ராம்விக்டரும் வாசித்தனர்.
திருமதி. மூமினா பேகம் அவர்களுக்கு இப்படி ஒரு பிள்ளையை ஈன்றெடுத்த தாய் என்கிற பெருமைக்கு நீங்கள் மிகவும் உரியவர்கள். உங்களால் பொதுவாழ்க்கையை தன்னில் இணைத்து நடைபோடும் ஆர்வலர்.. நண்பர்.. ஊடகவியலாளர் என்று பன்முகம் காட்டும் பணிவான அன்பர் முதுவை ஹிதயத்துல்லா அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்தத் தருணத்தை நாங்கள் பயன்டுத்திக்கொள்கிறோம் என்றார் தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன்.
சிறப்பு விருந்தினர் மூமினா பேகம் அவர்களுக்கு கவிதாயினி நர்கீஸ் பானு அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். நினைவுப் பரிசினை தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் மற்றும் கவிஞர் ஆதிபழனி ஆகியோர் வழங்கினர். மேலும் திருமதி. ஹிதாயத்துல்லா அவர்களும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
ஏற்புரையில் தமிழ்த்தேர் அமீரகத்தில் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டிய முதுவை ஹிதயத்துல்லா இதன் பணிகள் மென்மேலும் வளர்ச்சிபெறவும் இதனால் தமிழர்கள் இன்னுமின்னும் ஒன்றுகூடிப் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
தமிழ்த்தேர் இதழ்களின் 83வது சிறப்பிதழாக அருவி இதழ் வெளியிடப்பட்டது. முதல் இதழை திருமதி. மூமினா பேகம் வெளியிட கவிஞர் குறிஞ்சிநாடன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை திரு.அப்துல்லா வெளியிட திரு.கபில்தேவ் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை திரு.கு.ரமணி வெளியிட திரு.ந.காமராஜ் பெற்றுக் கொண்டார்.
ஆயிரமாயிரம் இடையூறுகள் இடையே வந்தாலும் தமிழ்த்தேரின் இதழ்களை சீரோடும் சிறப்போடும் வெளிக்கொணரும் பதிப்பாசிரியர் கவிஞர் ஜியாவுதீன் அவர்களுக்கும், அவரின் துணைவியார் நர்கீஸ் பானு அவர்களுக்கும் முதுவை ஹிதாயத் தம்பதியினர் இணைந்து நினைவுப்பரிசினை வழங்கினார்கள்.
அருவி எனும் தலைப்பில் அழகாய் நடைபெற்ற அரங்கத்தின் நன்றியறிவிப்பினை ந.காமராஜ் ஆற்றினார்.
நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர்- நண்பர்கள் கவிஞர் ஜியாவுதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கவிஞர் காவிரிமைந்தன், புதுவை கு.ரமணி, கவிஞர் ஆதிபழனி, கவிதாயினி நர்கீஸ் பானு, ராம்விக்டர், ஜெயராமன் ஆனந்தி, கவிஞர் ஷேக் ஹிதயத்துல்லா, குறிஞ்சிநாடன், காமராஜ், தமிழ்த்திரு. அப்துல்லா, ந.காமராஜ், சக்திவேல், செல்வி ஆனிஷா, வெற்றிச்செல்வன், அ.குமணன், நா.வெங்கடாசலம், க.கபில்தேவ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அடுத்த மாதத் தலைப்பாக "இலக்கு" வருகிறது. குழந்தைகள் சிறப்பு மலராக மலரவிருக்கிறது. 14.11.2014 அன்று நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் நண்பர்கள் குடும்ப சந்திப்பாக நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன், கவிஞர் ஆதிபழனி, குளச்சல் இப்ராஹிம் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.