துபாயில் நடந்த கூத்தாநல்லூர் ஜமாஅத்தின் 23வது பொதுக்குழு கூட்டம்
துபாய்: துபாயில் கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷனின்(கே.இ.ஓ.) 23வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷனின் 23வது பொதுக்குழு கூட்டம் கடந்த 15ம் தேதி தேரா அன்னபூர்ணா உணவக ஹாலில் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் டி.எம்.ஹெச். முஹம்மது ஆரிப் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
அமைப்பின் கௌரவ தலைவர் பி.எம்.ஏ. முஹமது இப்ராஹிம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அமைப்பின் கௌரவ ஆலோசகர்கள் எம்.ஆர்.இ. அப்துல் ரஹ்மான், பி.ஏ. ரபீக் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கௌரவ ஆலோசகர் கே.எம். அஹமது மைதீன் வரவேற்புரையாற்றினார். அமைப்பின் செயல்பாடுகள், கூத்தாநல்லூருக்காக கே.இ.ஓ. செய்து வரும் பணிகள், தேவைகள் மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
எஸ்.எம்.ஹெச். பாவா மைதின் 2015-2016ம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து டி.எம்.ஹெச். முஹம்மது ஆரிப் ஆண்டறிக்கையை வாசித்தார்.
மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அமைப்பின் நோக்கங்கள், செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் 2016-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
எம்.ஏ. செய்யது அஹமது அவர்களால் துஆ ஒதப்பட்டு, நன்றியுரையுடன் இக்கூட்டம் இரவு உணவுக்கு பிறகு இனிதே முடிவுற்றது.