சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மு. மேத்தாவின்“நட்சத்திர ஜன்னலில்
சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 18-04-2015 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூரில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில், கவிஞர் மு. மேத்தாவின் "நட்சத்திர ஜன்னலில்" என்ற நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியது.
குறித்த நேரத்தில் சிங்கப்பூரின் தந்தை அமரர் லீ குவான் இயூ அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடினார், ராஃபில்ஸ் பெண்கள் பள்ளியின் மாணவி செல்வி சிநேஹா முரளி. அவரைப் பாராட்டி, பரிசு வழங்கினார் கணிதப் பேராசிரியர் திரு. அமானுல்லாஹ். திரு. லீ குவான் இயூ பற்றிய சிறப்புக் காணொளி காண்பிக்கப்பட்டது. தலைமையுரையும், வரவேற்புரையும் வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் திரு. காதர், சிங்கை வாழ்தமிழர்கள் வீட்டிலும், நாட்டிலும் அதிக அளவில் தமிழில் பேச வேண்டும் என்றும், தமிழர்கள் சிங்கப்பூரில் மக்கள் தொகையிலும், சொந்தத் தொழில் செய்வதிலும், கல்வி மேம்பாட்டிலும் பெரிய வளர்ச்சிக் காண்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு. கி. கார்த்திகேயன் "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாரதிதாசனின் பாடலைப் பாடிப் பரவசப்படுத்தினார். தமிழர்கள் தமிழர்களைச் சந்திக்கும்பொழுது தமிழில் பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முனைவர் திரு. காதர் எழுதிய "நாம் அன்னைத் தமிழை வாழ்த்திடவே ஒன்று கூடுவோம்" என்ற சிறப்புப் பாடலை பாடகர் மு. அ. ஜெய்னுல் ஆபிதீன் சிறப்பாகப் பாட "தமிழை நேசிப்போம்; தமிழில் பேசுவோம்" என்ற பாடல் வரிகளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் சேர்ந்து பாடிய விதம், அரங்கம் முழுவதும் தமிழ் மணம் பரப்பியது. பாடகருக்கு, சங்கத்தின் துணைத் தலைவர் திரு. கலந்தர் மொஹிதீன் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த மூத்த எழுத்தாளர் திரு. ஜே. எம். சாலி, ஆசியான் கவிஞர் திரு. க. து. மு. இக்பால், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், தமிழாசிரியர் திரு. மு. ஆ. மசூது, எழுத்தாளர் திரு. ஷா நவாஸ் ஆகியோருக்கு அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, கவிஞர் மு. மேத்தாவின் கரங்களால் "ஜமாலியன் விருது" வழங்கப்பட்டது.
சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட தமிழ்துறைப் பேராசிரியரும், திரைப்படப் பாடலாசிரியரும், "புதுக்கவிதையின் தாத்தா" என்று அழைக்கப்படுபவருமான கவிவேந்தர் மு. மேத்தா, திரைப்படப் பாடல்கள் எழுதிய அனுபவங்கள், மற்ற கவிஞர்களின் தமிழ் ஆற்றல், பாரதிதாசனின் ஒப்பற்ற வரிகளை குறிப்பிட்டு இலக்கிய உரை நிகழ்த்தினார். தாம் விழாமல் இருப்பதற்கு விழா எடுப்பவர்களுக்கு மத்தியில், தமிழ் மொழி விழாமல் இருப்பதற்கு ஒரு மாதம் முழுவதும் விழா எடுக்கும் வளர்தமிழ் இயக்கத்தை அவர் பாராட்டினார்.
"நம் எல்லோருக்கும் தாய் நாடு உண்டு. ஆனால், அமரர் லீ குவான் இயூ ஒரு தேசத்தின் தாய்" என்று புகழாரம் சூட்டினார். "நட்சத்திர ஜன்னலில் வழியாக வானம் தான் சிங்கப்பூரை எட்டிப் பார்க்குது; வியக்குது; மலைக்குது; மகிழுது"" என்று வர்ணித்தார். நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினார், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ஃபரீஜ் முஹம்மது. சங்கத்தின் செயலாளர் திரு. அப்துல் சுபஹான் நன்றி கூறினார். உரிய நேரத்தில் துவங்கப்பட்டு, ஒழுங்கோடும் நேரத்தொடும் இரவு மணி 8.30க்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.