அபுதாபியில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு
துபாய்: சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வருடாந்தர சந்திப்பு விழா அபுதாபி ஃபுட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ஷபீர் வரவேற்றார். நிபல் சலீமின் குரான் குறிப்போடும் ஜூனியர் பழமலையின் ஸ்லோகத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
குழுமத்தின் தலைவர் பாஸ்கர் கடந்த ஆண்டு நிகழ்வுகளையும், வருங்கால திட்டங்களையும் விவரித்தார்.
குழந்தைகளின் நடனம் மற்றும் பாடல்கள் அனைவரையும் மனம் குளிர வைத்தது. சிறுவன் துகிலன் மோகன் நவீன விளையாட்டு சாதனங்கள் அவர்களின் குழந்தை பருவத்தை எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதை அழகாக நடித்து காண்பித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.
செல்வி ஸ்ரீநிதி குமரவேல், செல்வி மதுலேகா ஆகியோர் அழகாக ஆடியும் பாடியும் அனைவரின் மனம் கவர்ந்தனர். குழந்தைகளின் உடை அணிவகுப்பும் ஆட்டமும் கண்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது. கவிதா முருகேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இனி வரும் நாட்களில் குழுமத்தில் பெண்களும் அதிகம் கலந்துகொள்ள முயற்சி எடுப்பதாக சாந்தி பாஸ்கர் உறுதி கூறினார்.
முஹமது இலியாஸ் அருமையாக போட்டிகள் நடத்தி அரங்கத்தையே அதிர வைத்தார். தமிழ் வளர்க்கும் எண்ணத்தோடு வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ் கதை, கவிதை மற்றும் வணிக புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. இயற்கை நல்வாழ்வியல் குறித்து மோகன் தயாளன் மற்றும் மரபுசாரா விவசாய வழிகள் குறித்து பாஸ்கரும் பேசினார்கள்.
புதிய நிர்வாகிகளாய் செல்வராஜ் - தலைவர், இம்தியாஸ் ஷெரிப் - செயலாளர், தங்கராஜ் - பொருளாளர், நரேன்- துணை பொருளாளர் ஆக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விழாவினை தனமாதவன் தொகுத்து வழங்க, பிட்சைபிள்ளையின் நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.