அக்டோபரில் சிட்னியில் 2 நாட்கள் கோலாகலமாக நடக்கும் சங்கத் தமிழ் மாநாடு
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடத்தும் சங்கத் தமிழ் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சங்க கால தமிழை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறுவது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த மாநாட்டில் கருத்தரங்கு, கவியரங்கு, ஆய்வரங்கு, இசை அரங்கு, நடன அரங்கு ஆகிய அம்சங்கள் இடம்பெறும்.
இதில் உலகத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். உள்ளூர் அறிஞர்களும், கலைஞர்களும், தமிழ் ஆன்றோர்களும் பங்கேற்கும் இந்த மாநாட்டின் தமிழ் இளைஞர்களிடையே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழின் சிறப்பை, பண்பாட்டை, தமிழர்களின் வாழ்வியல் மாண்பை கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும்.
தமிழர் என்ற அடையாளத்துடன் பெருமிதத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் அன்புடன் அழைக்கிறது.
மாநாட்டையொட்டி வெளியிடப்படும் மலருக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் சங்கத் தமிழ், சங்க காலத் தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டும். 5 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரையை யூனிகோட் ஃபார்மாட்டில் டைப் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரையுடன் சேர்ந்து உங்களின் விவரம், புகைப்படம் ஆகியவற்றையும் அனுப்பி வைக்கவும். கட்டுரைகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.