லய இசையில் லயித்த மெல்பர்ன்! பார்வையாளர்கள் உற்சாகம்!
மெல்பர்ன்: மெல்பேர்னில் நடைபெற்ற மிருதங்க இசைக் கச்சேரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ஏராளமான உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தியன் ஆர்ட்ஸ் அகாடமியின் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.
மாலை 6:30 மணிக்கு முன்னரே ரிவர்கம் மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரத்னம் ரகுராமும் கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன், கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு, சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை துவக்கி வைத்தார்.
மண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திரைச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் சிறீ அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது.
அணியிசைக் கலைஞர்கள் தமது திறமையை வெளிக்கொண்டு வந்ததோடு அரங்க நாயகன் கணாதீபனுக்கு முழு உற்சாகத்தை கொடுத்து அவரை மிளிரச் செய்து, அவரது திறமையை சபையோர் முன் படைக்க வழங்கிய ஒத்துழைப்பு அபாரம்.
அதனைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு 20 நிமிடங்களில் மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பித்தன. ஹிண்டேலா ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு மீண்டும் ஆரம்பித்த நிகழ்வு சந்தர கென்ஸ் ராகத்தில் அமைந்த பிட்டுக்கு மண்சுமந்த என்ற பாடலோடு தொடர்ந்தது.
அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பும் குரு கௌரவிப்பும் நடந்தேறியது. தொடர்ந்து கணாதீபன் தனது பெற்றோர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்து, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியது சபையோரின் பாராட்டைப் பெற்றது.
தொடர்ந்து ரேவதி ராகத்தில் அமைந்த ஜனனி, ஜனனி பாடல் இடம்பெற்று நிறைவாக தில்லானா, மங்களத்தோடு அரங்கேற்றம் நிறைவிற்கு வந்தது.
இந்நிகழ்ச்சிகளின் இடையிடையே பல்வேறு வகைப்பட்ட தகவல்களை வழங்கி சிந்தனைக்கு விந்தளித்திருந்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம் அவர்கள்.
பக்க வாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த வைத்திய கலாநிதி சிறீ பத்ரி அவர்களும், கெஞ்சீரா வாசித்த தென்காசி சிறீ ஹரிகரன் பரமசிவம் அவர்களும், மோர்சிங் வாசித்த மலைக்கோட்டை ஆர்.எம். தீனதயாளு அவர்களும், கடம் வாசித்த உள்ளுர் கலைஞரான திவாகர் யோகபரன் அவர்களும் தம்புரா வாசித்த செல்வி. கீர்த்தனா ராஜசேகர் மற்றும் செல்வன். நிவாஷன் தயாபரன் ஆகியோர் பாடகர் சிறீ. அகிலன் சிவானந்தன், நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் மிருதங்க இசையோடு பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
மிக மிகக் கடுமையான ஜதிகளையும் தாளக்கட்டுக்களையும் கொண்ட கீர்த்தனைகள் பாடல்களுக்கு கணாதீபன் அசராமல் மிருதங்கத்தினை கையாண்டார். விருந்தினராக கலாகுருத்தி நாட்டியப் பள்ளியின் நிறுவனர் ஷோபா சேகர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சுப்ரமணியம் ராஜரத்தினம் அவர்களும் சிறப்பித்தனர்.