ஷார்ஜா அரசின் புத்தகத் திருவிழா... வைரமுத்து சிறுகதை நூல் அறிமுகம்!
ஷார்ஜா மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது ஏற்பாடு செய்திருக்கும் புத்தக திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வைரமுத்து சிறுகதைகள் நூல் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் சீதாராம், வைரமுத்து சிறுகதைகள் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார். கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார். 60 நாடுகளிலிருந்து 1250 பதிப்பாளர்கள் பங்குபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் ஆண்டுதோறும் 14 லட்சம் பார்வையாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.
வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் இந்த புத்தக திருவிழா உலக இலக்கியவாதிகளின் சந்திப்பு மையமாகவும் விளங்குகிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த புத்தக திருவிழாக்களில் டான் பிரவுன், அருந்ததிராய், அப்துல்கலாம், சேத்தன்பகத், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி.குரூப், ரஸ்கின் பாண்ட், டெர்ரி ஓ பிரெய்ன் ஆகிய உலக புகழ்மிக்க படைப்பாளிகள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொள்கிறார்.
உலகச் சிறுகதைகள் குறித்தும், தொழில்நுட்ப யுகத்தில் இலக்கியத்தின் தேவை குறித்தும் கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார். சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை விமானத்தில் கவிஞர் வைரமுத்து துபாய் பயணமாகிறார். 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு விமானத்தில் சென்னை திரும்புகிறார்.