குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று அனைத்து சக்தி ஸ்தலங்கள் எனப்படும் அம்மன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் ஆடி செவ்வாயை முன்னிட்டு விரதமிருந்து பூஜை மற்றும் வழிபாடு செய்கின்றனர்.
ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. 'ஆடி செவ்வாய் தேடிக் குளி - அரைத்த மஞ்சள் பூசி குளி" என்பது பழமொழி.
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை
வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.
விவாகமான பெண்கள் தம் கணவனிடம் பிரச்சனை உள்ளவர்கள் குறையாத அன்பைப் பெறவும், என்றும் ஈருடல் ஒருயிர் என அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும் மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
ஜோதிடத்தில் செவ்வாய்:
ஜோதிடத்தில் ரத்தத்தின் அதிபதியாக கூறப்படுபவர் இன்றைய தின நாயன் அதாங்க! மங்களன் எனப்படும் செவ்வாய்தாங்க!
ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம்.
இளம்பெண்களுக்கும் செவ்வாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க! தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைக்கேற்ப்ப கணவனை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்.
எந்த ஒரு பெண்ணும் வீரமுள்ள ஆண்மகனையே கணவனாக அடைய விரும்புவாள். எனவே வீரத்தை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான்.
ஒருபெண்ணுக்கு சந்தோஷமான தருனமான பூப்படையும் தன்மையை ஏற்படுத்துவதும் செவ்வாய்தாங்க.
ரத்தத்தின் காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும் . அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவும் சிலருக்கு வேக உணர்ச்சியாகவும் சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும்.
செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு
தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாக கூறப்படுகிறது.
ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர்.
தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்க்கு மறுப்பு தெரிவிப்பார்.
ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று விளையாட்டாக கூறினாலும், அதை தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார்.
செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
செவ்வாய் என்பது ஒரு ஆண் கிரகமாகும். வீரம், ஆண்மை, கம்பீரம் வீரியம், இரத்தம், உணர்ச்சியை தூண்டுதல் ஆகியவற்றின் காரக கிரகமாகும்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது. கணவனுக்கு பாதிப்பு தருகிறது. பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும், கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது. செவ்வாய் அதிக வீரியமுள்ள கிரகம் என்பதால் காம உணர்வை தூண்டுவதில் அதாவது எண்ணத்தை செயல்படுத்துவதில் வல்லவனாக திகழ்கிறது.
செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) குளித்தால் தீய கதிர்களின் தாக்கத்தை தடை செய்கின்றது.
மேலும் ஆடி மாதத்தில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் உடம்பில் சொறி, சிரங்குகள், அம்மை நோய், மற்றும் பல சரும நோயின் தாக்கத்திற்க்கு பெண்கள் ஆளாக நேரிடும். அத்தகைய சரும வியாதிகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கிருமி நாசினியான அரைத்த மஞ்சளை பூசி குளிக்கின்றனர். இதன் காரணமாகவே ஆடி மாதம் முழுவது மாரியம்மன் கோயில்களில் வேப்பிலை தோரணங்களையும் பலர் மஞ்சள் ஆடை அணிந்திருப்பதையும் காணலாம். மேலும் செவ்வாயின் தாக்கத்தை குரு நிவர்த்தி செய்யும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணமாக குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள் விளங்குகிறது.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனயும் முருகனையும்
வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்