திருமணம்- புத்திரபாக்கியம் பெற தாடகாந்தபுரம் ஈசனை வழிபடுங்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
மனித வாழ்க்கையில் முக்கிய கட்டம் திருமணம்... அந்த திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்திற்குப் பின்னர் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ தஞ்சை மாவட்டத்தில் உள்ள தாடகாந்தபுரம் வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகை சமேதராய் விளங்கும் ஸ்ரீ விஸ்வநாத சுவாமியை தரிசனம் செய்தால் திருமணம், புத்திர பாக்கியம் கைகூடும் என்கின்றனர். இது மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியதாக அமையப் பெற்ற திருக்கோயிலாகும்.
இன்றைய ஆலய தரிசனத்தில் நாம் ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமியைத்தான் தரிசிக்க இருக்கிறோம்.
வரலாற்று சிறப்பு:
இராமயண நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில் இராமபிரான் தாடகியைத் துரத்தி வந்ததாகவும் அந்த அரக்கி இவ்வூரில் ஒழிந்து கொண்டு ஓர் இரவு தங்கியதாகவும் மறுநாள் இராமபிரானால் வதம் செய்யப்பட்டார் எனவும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன. எனவே தான் தாடக + அந்த + புரம்= தாடகாந்தபுரம் என்று வழங்கலாயிற்று.
அம்பிகை
காசியிலிருந்து த்ன் பதியான விஸ்வநாதருடன் திருவாஞ்சியத்திற்குக் கார்த்திகை ஞாயிறு அன்று கங்கையில் புனித நீராட வந்த விசாலாட்சி கால்வலி தாங்க முடியாமல் இந்த வளப்பாற்றங்கரையில் அமர்ந்ததோடு சிவபெருமானை மேற்கு முகமாக வைத்து பூஜித்தாள். அந்த காசிலிங்கம் இன்றும் வாகன மண்டபத்திற்கு அருகில் பெரிதாக உள்ளது.
சோமவாரத்தில் வளப்பாற்றங்கரையில் ஸ்நானம் செய்து வில்வதளத்தால் சிவலிங்கத்தையும் விஸ்வநாதரையும் வழிபடும் பக்தர்கள் காசிக்கு சென்றபலனைப் பெருவதோடு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெறுவர். இத்தலத்து சிவபெருமானை பூஜித்தால் நூற்றியெட்டு லிங்கங்களைப் பூஜித்த பலனோடு குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என அம்பிகை கூறுகிறாள்.
அம்பிகையின் சிறப்பு
பாடல் பெற்ற திருத்தலங்கள் பலவற்றிலும் தமிழகத்துச் சிவாலயங்களிலும் அம்பிகை நின்ற கோலத்தில் தான் காட்சி தருகிறாள். தஞ்சை தாடகாந்தபுரத்தில் மட்டுமே அம்பிகை விசாலாட்சி என்னும் நாமத்தில் அமர்ந்த நிலையில் ஒருகையில் தாமரை மலர் ஏந்தி அருள் பாலிக்கிறாள்.
தனி சிறப்பு
இத் திருக்கோயிலில் காமிகம் என்ற ஆகம முறைப்படி இருகால பூஜை நடைபெறும். இவ்வாலய சுவாமிக்கு சோடச முறையில் பதினாறு அபிஷேகங்களை முறையாக செய்வோருக்கு பதினாறு செல்வங்களும் கிட்டும் என்பதும் திருமணம்-புத்திரபாக்கியம் ஆகியவை நல்லவிதமாக அமைய அம்பிகையை பிரார்த்தித்துச் செல்லலாம் என்ற ஐதீகமும் பக்தர்களுக்கிடையே இருந்து வருகிறது.
ஊரின் அமைப்பு:
இவ்வூரின் அமைப்பானது வானிலிருந்து பார்க்கையில் தேனிருக்கும் கூடு போலவும் பிரணவ வடிவமாகவும் தெரிவது அதிசயமாகும்.
அமைவிடம்:
திருவாரிரூரிலிருந்து நன்னிலம் செல்லும் செல்வபுரம் வழியாகவும் கும்பகோணத்திலிருந்து குடவாசல் நன்னிலம் பேருந்து வழியில் மாப்பிள்ளைக்குப்பம் ஆனைக்குப்பம் வழியிலும் பேருந்தில் செல்லலாம்.