ஆலய தரிசனம்: அம்மநாத சுவாமி - சேரன்மாதேவி
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவகைலாயங்களில் இரண்டாவது ஆலயமான சேரன்மாதேவி அம்மநாத சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியதாகும்.
புராண வரலாறு:
உரோமச முனிவர் கைலாய மலையை அடைந்து தனக்கு நித்தியத்துவம் வேண்டுமென்று ஆலமரத்தின் அடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிபட்டார். சிவபெருமானும் உரோமச முனிவருக்கு காட்சியளித்தார்.
இத்திருக்கோயிலுக்கு அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன் பக்தவச்சலராக காட்சியளித்தார். இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக ஆலமரம் விளங்குகிறது. இத்திருக்கோயிலின் மூலஸ்தானத்தை இருவர் சேர்ந்து கட்டியுள்ளனர் என்பது தலவரலாறு ஆகும்.
தல வரலாறு:
இரண்டு சகோதரிகள் சேர்ந்து அம்மநாத சுவாமி கோயிலின் மூலஸ்தானத்தைக் கட்டுவதற்காக தாங்கள் செய்து வரும் நெல் குத்தும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு கோயில் மூலஸ்தானம் கட்டுவதற்கான பணம் சேரவில்லை. இது குறித்து அவர்கள் மிகவும் கவலையடைந்து சிவபெருமானை வழிபட்டனர்.
சிவபெருமான் மாலை நேரத்தில் முதியவர் வடிவில் அந்த சகோதரிகளின் வீட்டிற்குச் சென்றார். சகோதரிகள் இருவரும் அவருக்கு பணிவிடை செய்து உணவு பரிமாரினார்கள். சிவபெருமானும் உணவு உண்டுவிட்டு அவர்களை வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார். சிவபெருமான் வந்து சென்ற பிறகு அந்த சகோதரிகளின் இல்லத்தில் செல்வம் கொழித்தது. சகோதரிகள் இருவரும் மூலஸ்தானத்தை கட்டினார்கள் என்பது வரலாறு. இதற்கு சான்றாக கோயிலில் உள்ள தூணில் இரண்டு சகோதரிகள் நெல் குத்துவது போன்ற சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு சான்று:
இத்திருக்கோயில் அமைப்புப் பணியில் ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் சேர்ந்து கட்டியதாகவும் கல்வெட்டு சான்று உள்ளது.
இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தவையாகும். மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் ஆகும். சேர மன்னர் தன் மகளின் பெயரை இந்த ஊருக்கு சூட்டினார் என்றும் அதன் பின்னரே இந்த ஊருக்கு சேரன்மகாதேவி மங்கலம் என்ற பெயர் வந்தது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
தனிச் சிறப்பு:
ஸ்ரீஅம்மநாத சுவாமி என்ற கைலாயநாத சுவாமியாகவும் ஆவுடை நாயகி அம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். அம்மநாதர் சுவாமி சுயம்புவாக உருவானவர் என்று கூறப்படுகிறது.
இத்திருக்கோயிலுக்கு அருகில் இருக்கும் யாக தீர்த்தத்தில் நாற்பத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து ஸ்நானம் செய்து வந்தால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
அமைவிடம்:
இத்திருக்கோயில் திருநெல்வேலியிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.