மூளை,புத்தி, நரம்பு... எல்லாமே நல்லா இருக்கணுமா? புத பகவானை வணங்குங்க!
ஜோதிட ரீதியாக நரம்பு மண்டலங்களின் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். நரம்பு தொடர்பான நோய்கள், அதற்கான பரிகாரங்களை காணலாம்.
சென்னை: புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். புதனின் அமைப்பு ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் எந்தத் துறையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.
கல்விக்கு அதிபதியாக புதன் திகழ்கிறார். புதன் புத்திகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சரியாக இருந்தால் புத்தியும் சரியாக இருக்கும்.
கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதன் பலமிழந்திருந்தால், முட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். பலவகை பிரச்சனைகளும் தேடி வரும்.
புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.
தீயசேர்க்கைகள்
என்னதான் நல்ல பிள்ளையாக இருந்தாலும் சேர்க்கை சரியில்லாவிட்டால் புத்தி கோணல்புத்தியாகத்தான் போகும். அதுபோல புதனின் சேர்க்கை ஒருவரின் ஜாதகத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே அவருக்கு நன்மை தீமைகள் அமையும்.
நீசம் பெற்ற கிரகங்கள்
புதனுடன் நீச்சக் கிரகங்கள், வக்ர கிரகங்கள், பாவகிரகங்கள், 6, 8, 12ம் இட ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் ஜாதகரின் புத்தி, அறிவு, ஆற்றல் எல்லாம் தீயவழிகளில் வேலை செய்யும். மனிதனின் எல்லா வகை போதைப் பழக்கங்களுக்கும் வலிமை இல்லாத புதனே காரணம்.
நோய்கள் பாதிப்பு
புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். இந்த விஷயங்கள் புதனின் தசா புக்தி காலங்களில் அதிகமாக இருக்கும். அத்துடன் புதனுடன் சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்களின் தசாபுக்திகளிலும் உடல் கோளாறுகள் ஏற்படும்.
புதன் சனி சேர்க்கை
நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் மற்றும் சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். இச்சேர்க்கை 6,8,12 இல் பாவிகளுடன் அமையப் பெற்றால், தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும்.
பெண்களுக்கு பாதிப்பு
இளம் வயதிலேயே கைகால் குடைச்சல், இடுப்பு வலி, குதிகால் வலி என்று அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கப் பெற்ற பெண்களுக்கு இதனால் பெரிய தொந்தரவு ஏதும் இருப்பதில்லை. ஆயினும் ஐம்பது சதவீதப் பெண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்
மூளையில் பாதிப்பு
புதன் செவ்வாய் 6,8,12ல் இணைந்திருந்தால் ஒய்வில்லாத நிலையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.
லக்னாதிபதியும் சனியும் சேர்ந்து 6,8,12 களில் ஒன்றில் இருந்தால் தலையில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும்.
புதன் செவ்வாய்
புதன் வலுவிழந்து, செவ்வாய் பகவான் ரத்தக் காரகன் என்பதால் இவரும் நீசம் அல்லது பகையாகி பலமிழந்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஒட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, மயக்கம் வலிப்பு நோய்கள் உண்டாகும்.
புதனுக்கு பரிகாரம் செய்தால் தலை சம்மந்த பட்ட நோய்கள் விடுதலையாகும்.
சத்தான உணவுகள்
புதனுக்குரிய பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடுதல், பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள்.
பாதம், பிஸ்தா பழங்கள்
நரம்புகள் வலிமை அடையும்போது உடற்பயிற்சி செய்யும்போது அசதி உண்டாகாது. உடலும் வலிமை பெறும். முருங்கை, அகத்தி போன்ற கீரை வகைகளும் மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, தேன், பால் இவற்றுடன் எல்லா வகையான பழ வகைகளையும் சாப்பிட்டு வருவது நன்மை கிடைக்கும். நரம்புகள் வலுவடையும்.
பச்சை நிற ஆடை
புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தானியம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும்.
பரிகாரம்
புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பரிகாரமாகும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வணங்கலாம். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும்.