துர்முகி - தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்
சென்னை: மேஷ ராசியில் சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். மங்களகரமான மன்மத வருஷம் பங்குனி மாதம் 31ம் தேதி (13-04-2016) புதன் கிழமை சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் சுகர்மம் நாமயோகம் வணிசை கரணம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 07-48 மணியளவில் துலாம் லக்கினத்தில் மங்களகரமான துர்முகி வருஷம் பிறக்கிறது.
60 வருடங்களில் மிக முக்கிய வருடமாக இந்த வருடம் வருகிறது. இது 30வது வருடமாகும். வருட ஆரம்பத்தில் ராஜ கிரகமான சூரியனுடைய வீடான சிம்மத்தில் சுபகாரகன் குரு இருப்பது இந்த வருடத்தில்தான்.
இந்த வருடத்தின் ராஜா, தான்யாதிபதி - சுக்கிரன்; மந்திரி, அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி - புதன் ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி - சனி ரஸாதிபதி - சந்திரன் பசுநாயகர் - கோபாலன் ஆகியோர் அதிபதிகளாவர். ராஜாவும் தான்யாதிபதியும் லக்னாதி பதியாகவே வருவதால் உணவு பஞ்சம் குறையும். உணவு உற்பத்தி அதிகரிக்கும்.
துர்முகி - கோள்களின் நிலை
துர்முகி வருட லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் நாட்டில் தொழில் வகையில் முன்னேற்றம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.
இரண்டாமதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால் நாட்டின் மொத்த வருமானம் அதிகரிக்கும் இருப்பினும் சனியுடன் சேர்ந்திருப்பதால் உள்நாட்டு குழப்பங்கள் உண்டாகும். ரத்த சம்பந்தமான புதிய வகை நோய்கள் தோன்றும்.
மூன்றாமதிபதி குரு பதினொன்றாமிடத்தில் பலம் பெற்று இருப்பதால் தொழில் வியாபாரம் விருத்தியாகும் ராகு தொடர்பு பெற்றிருப்பதால் பண புழக்கம் அதிகரிக்கும்.
நான்காம் அதிபதி சனி இரண்டாமிடத்தில் இருப்பதால் வாகன உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் புதிய வகை இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும்.
ஐந்தாம் அதிபதி சனி செவ்வாயுடன் சேர்ந்து இரண்டாமிடத்தில் இருப்பதால் மக்களின் ஆடம்பர வாழ்க்கையும் சுகபோகமும் அதிகரிக்கும் ஐந்தாமிடத்தில் கேது இருப்பதால் கடவுள் பக்தி அதிகரிக்கும்.
ஆறாம் அதிபதி குரு பதினொன்றாமிடத்தில் இருப்பதால் நாட்டின் ராணுவ பலம் அதிகரிக்கும் ராகு சேர்ந்திருப்பதால் மக்களிடையே தைரியம் அதிகரிக்கும் கடன் சுமை குறையும்.
ஏழாம் அதிபதி செவ்வாய் இரண்டாம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வெளிநாட்டு உறவு சிறப்படையும். ஏழாம் இடத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருப்பதால் தகவல் தொழில் நுட்பம் மேன்மையடையும்.
எட்டாம் அதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் உச்சம் பெற்று இருப்பதால் தீவிரவாதிகளின் தொல்லை குறையும் விபத்துக்கள் குறையும் பெண்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
ஒன்பதாம் அதிபதி புதன் ஏழாம் இடத்தில் சூரியனுடன் சேர்ந்திருப்பதால் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் புதிய தொழில் நுணுக்கம் கண்டுபிடிக்கப்படும்.
பத்தாம் அதிபதி சந்திரன் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தொழில் உத்தியோகம் சிறப்படையும் வெளிநாட்டு தொழில் தொடர்பு வலுபடும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்.
பதினொன்றாம் அதிபதி சூரியன் ஏழாம் இடத்தில் புதனுடன் சேர்க்கை பெற்றிருப்பதால் தொழில் லாபம் அதிகரிக்கும் நாடு தொழில் துறையில் முன்னேறும்.
பன்னிரெண்டாம் அதிபதி புதன் ஏழாம் இடத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருப்பதால் வெளிநாட்டு தலைவர்கள் நம் நாட்டுக்கு வருகை புரிவது அதிகரிக்கும் நாட்டு தலைவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
நன்மை தரும் துர்முகி
துர்முகி வருடத்தில் பொதுவாக நாட்டில் நல்ல மழை பொழியும் வேளான்மை பயிர் விளைச்சல் அதிகரிக்கும் மக்கள் அச்சமின்றி அமைதியுடன் ஒற்றுமையுடன் வாழ்வர் நாட்டில் சுபிட்சம் அதிகரிக்கும் தங்கம் வெள்ளி விலை உயரும் பங்கு வர்த்தகம் சீராக இருக்கும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயரும்.
குரு பெயர்ச்சி : ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) வியாழக்கிழமை இரவு 09-28 மணிக்கு குருபகவான் சிம்மம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சனி பெயர்ச்சி : தை மாதம் 13ம் தேதி (26-01-2017) வியாழக்கிழமை இரவு 07-31 மணிக்கு குருபகவான் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
துர்முகி புத்தாண்டு ராஜா
இந்தத் தமிழ்ப் புத்தாண்டின் ராஜா சுக்கிரன் ஆகிறார். சுக்கிரன் வலுத்திருக்கிறார். சுபிட்சம் கூடும். அதிக மழை பெய்யும். விளைச்சல் அதிகமாகும். பால், வெண்ணெய், தயிர் போன்ற வெண்மைப் பொருட்கள் அதிக லாபம் தரும்.
சுக்கிரன் களத்திர காரகன் என்பதுடன் திருமணத்துக்கும் காரகர் என்பதால் திருமண வயதில் உள்ளவர்களுக்கு தடைகளும் குறுக்கீடுகளும் விலகித் திருமணம் ஆக வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் கலைக்குக் காரகன் என்பதால் கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.
உயர் ரக வாகனங்கள் தயாரிப்பும் விற்பனையும் சிறப்பாக அமையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டாகும். அன்பு கூடும். ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். மனித நேயம் மிகும். ஒருவருக்கொருவர் பாசத்துடன் பழகுவதற்கும் பகையை மறப்பதற்கும் சந்தர்ப்பம் உருவாகும்.
சுக்கிரன் பெண் கிரகம் ஆதலால் பெண்களுக்கு விசேஷமான நன்மைகள் உண்டாகும். உயர் பதவிகள் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மூலம் அதிக லாபம் கிடைக்கும். கூட்டுறவு வலுக்கும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
கலை சம்பந்தமான இனங்களில் வளர்ச்சி காணமுடியும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதில் அதிக ஆர்வம் உண்டாகும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
வெளியாட்களிடமும் குடும்பத்தாரிடமும் அன்பு அதிகமாகும். குடும்பப் பகை விலகும். யாகம், மற்றும் தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். வாங்கல், விற்றல் சிறப்பாக நடக்கும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாகும். பட்டுத்தொழில் சிறக்கும். உயர்ரக பருத்தி மற்றும் ஆடைகள் மூலம் லாபம் கிடைக்கும். வாகன யோகம் பலருக்கு உண்டாகும்.
ரிஷபம், துலாம், மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கும், ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பவர்களுக்கும் 6, 15, 24ஆம் தேதிகளில் ஒன்றில் பிறந்தவர்களுக்கும் பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கும் துர்முகி ஆண்டில் விசேஷமான நற்பலன்கள் உண்டாகும்.
இந்த ஆண்டிற்குரிய ராஜா, சுக்கிரன் என்பதால் இவருக்குரிய தெய்வம் ரங்கநாதர். இவரை வணங்குவதுடன், தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் அருகிலுள்ள கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வணங்குவதன் மூலம், மக்கள் நலமடைவர்.
துர்முகி ஆண்டிற்கான பொதுபலன்களை இன்று பார்த்துள்ளோம். 12 ராசிகாரர்களுக்கும் துர்முகி புத்தாண்டு எப்படி இருக்கும் நாளை முதல் பார்க்கலாம்