அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோபத்ம விரதம்!
ஆனி அமாவாசையை அடுத்து வருகின்ற சுக்ல பக்ஷ ஏகாதசி கோபத்ம விரத நாளாகும்.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று கோபத்ம விரதம் அனுஷ்டிக்கப்டுகிறது ஆனி அமாவாசையை அடுத்து வருகின்ற சுக்ல பக்ஷ ஏகாதசி கோபத்ம விரத நாளாகும். இந்த விரதம் ஆனி சுக்ல பக்ஷ ஏகாதசியில் தொடங்கி ஆனி பௌர்ணமியில் முடிகிறது. அதாவது ஐந்து நாட்கள் நடக்கிறது.
இந்நாட்களில் விரதம் இருந்து பசுக்களுக்கு பூஜை செய்தல் சிறப்பாகும். விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும்.
வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசிகள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி சொல்லொனா சிறப்புகள் வாய்க்கப்பெற்றது.
கோ-பத்ம விரதம்:
இன்று கடைபிடிக்கும் விரதம் கோ-பத்ம விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக நமக்கு கிட்டும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோமாதா:
நமது நாட்டில் ‘கோ' எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம்.
பசுவும் பெண்ணும் ஒன்று
பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. "பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்" ஏனென்றால் பால்சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால் கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகின்றது.
கோதானம்
உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிராணி பசுமாடு மட்டுமே ஆகும். சுத்தம் செய்யக் கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமயம் மட்டுமே ஆகும். கோவதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் ப்ராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். "தாய் - மாத்ரு" "சிசு = குழந்தை" "ப்ராஹ்மணன்" "கரு" ஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிஹாரம் இல்லை. அதைப் போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை.
கோபூஜை
இவ்வளவு குணங்கள் உடைய பசுமாட்டினை நாம் கடவுளாக வணங்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. முதல் கன்று பிரசவித்தவுடன் அதற்கு "கோ" என்று பெயர் கிடையாது. அதற்கு "தேனு" என்று பெயர். "தேனுர் நவப்ரஸுதிகா" என்று அமரகோசத்தில் குறிப்பிட்டுள்ளது. தானத்திற்கோ பூஜைக்கோ தேனுவை உபயோகப்படுத்துவதில்லை என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது.
பாபங்கள் போக்கும்
ஆகவே இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவான "கோ"வை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷத்திற்கும், எல்லாப் பாபங்களையும் போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாக பல தர்ம சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்டிகையான பொங்கலன்று அதாவது மாட்டுப்பொங்கல் நாளன்று கோ பூஜை செய்வது வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது. பண்டிகை இல்லாமல் காம்யமாகவே கோ பூஜை செய்யலாம்.
கோதானம்
சாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது.
ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நக்ஷத்திரத்திலும் கோதானம் செய்வதும், கோபூஜை செய்வதும் மேன்மை தரும் பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.
கோயில்களில் கோசாலை
கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.
பசுவும் தெய்வமே
பசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும்,காதுகளில் அஸ்வினி குமாரர்களும்,கழுத்து,தாடைப்பகுதிகளில் ராகு- கேதுவும்,இரண்டுகண்களில் சூரிய சந்திரர்களும், மூக்கின்மேல்பகுதியில் விநாயகரும் முருகனும்,முன்னிரண்டு கால்களில் பைரவரும் அனுமனும்,முகப்பகுதியில் சிவபெருமானும்,கழுத்துமுதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன்,வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர்,வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி,சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர்,அமிர்தசாகரமும்,வால் பகுதியில் நாகராஜனும்,முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சலபர்வதங்களும்,பின்கால் பகுதியில் மந்த்ராசலம்,துரோணாசல பர்வதங்களும்,மடியில்அமிர்தசுரபி கலசமும்,பசுவின் பின்புறத்தில்மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிறதேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம்.
ராமபிரான் பூமியில் அவதரிக்க மூலகாரணமே கோபூஜைதான் என்கிறதுபுராணம்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத|
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் ||
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
- என கீதையில் மொழிகிறான் பகவான் கிருஷ்ணர்.
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.