ஹேவிளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் ( சிம்மம் முதல் விருச்சிகம் வரை)
ஹேவிளம்பி வருடம் 12 ராசிகளுக்கும் புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ளலாம்.
சென்னை: ஹேவிளம்பி வருடத்தில் பன்னிரெண்டு இலக்கினம்/இராசி அன்பர்களுக்கும் நல்லவையே நடக்க இனிய ஹேவிளம்பி வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகாரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி வருடம்14-04-2017 அதிகாலை பங்குனி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 - 04 மணிக்கு மகர இலக்னம் துலா இராசி விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறது.
[Read This: ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் (மேஷம் முதல் கடகம் வரை)]
சிம்மம் முதல் விருச்சிகம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிம்மம்:
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.
சூரியன்: முதலில் மனைவியுடன் ஏற்படும் பிணக்குகளினால் தற்காலிகப் பிரிவு ஏற்படலாம்.பின்னர் இருவரும் ஒன்று கூடி மகிழ்வீர்கள். உதவி கேட்டுப் போகும் போது யார் உண்மையான நண்பர்கள் என்பது தெரியவரும். வியாபாரத் தொடர்பான, நெடுந் தூரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். புதிய விரிவாக்கத்திட்டங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தரும சிந்தனையால்,கோவில் மற்றும் குளங்களுக்குத் திருப்பணி செய்வீர்கள்.
செவ்வாய்: பொதுவாக சுப பலனைத் தருவார் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், தங்கள் திறமைக்கு ஏற்பகிடைக்கும். புதிய வியாபார நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதிகஇலாபங்காண முற்படுவீர்கள். வெற்றியும், சந்தோஷமும் உண்டாகும். பின்வரும் காலத்தில் கடன்களும், நீங்கும். பணவரவு அதிகரித்து வாழ்க்கையில் பலமுன்னேற்றங்கள் ஏற்படும்.
புதன்: அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுத்துப் பரிசாகப் புதிய உயர்பதவிகள் கிடைக்கும். உங்களால் உதவி அடைந்தவர்கள் சமயம் பார்த்துஉங்களுக்கே குழிபறிப்பர். பகைவர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் நல்ல தனவரவு உண்டாகும். புகழ் மரியாதைகள் கூடும்.வாகனாதிகள் வந்து சேரும்.
சுக்கிரன் - குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் புத்தி கூர்மையினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அதிக மதிப்பெண் பெறுவார்கள். நவீன பொழுதுபோக்கு உபகரணங்கள் யாவும் கிடைக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். வீரம், பிரதாபம் மற்றும் பூர்ண சயன சுகம் ஏற்படும், பின்னர்மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சியைத் தரும். சொற்பொழிவுத் திறன்கூடும். அதனாலும் பணவரவு கூடும். தனக்கென அழகிய தனி வீடு கட்டுவீர்கள்.
குரு: ஆவணி 27 க்கு முன்புவரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்குவார். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஒன்று பத்தாகி ஆதாயம் தரும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களின்றி உடனடியாக் கிடைக்கும். பின்னர் தைரிய பாவத்துக்கு வரும் குரு தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம். அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். தான தர்மமென கைப் பணம் கரையும்.
சனி: புத்திர பாவத்தில் அமர்ந்து நற்பலனைத் தருவார் மனைவி மக்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் முனைவருக்கு இது ஏற்றமான முன்னேற்றமான காலம் என்று சொல்லலாம் ஆடி முதல் கார்த்திகை வரை சுற்றியுள்ள சுற்றமும், நட்பும் பகை பாராட்டலாம். மானம்,மரியாதை மற்றும் கௌரவம் அனைத்தும் பறிபோகும். பின்னர் ஆண்டு முடிவுவரைசனி தரும் சிரமங்கள் குறைய விநாயகரையும், ஆஞ்சநேயரையும்மனதார வேண்டினால் இன்னல்கள் மறையும்.
ராகு: ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் குறைவு உண்டாகும் பிற்பகுதியில் செலவினங்கள் அதிகரிக்கும்.
கேது: ஆண்டின் முற்பகுதியில் வியாபார நிலை சிறப்பாக இருக்கும் பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும்.
கன்னி:
( உத்திரம் - 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை - 1,2பாதங்கள்)
புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள்
தரும் பலன்களைப்பார்ப்போம்.
சூரியன்: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனித்திறமையால் வாழ்வில் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். எவருமே இதுவரைசெய்யாத சாதனைகளைப் புரிவீர்கள். உயர் பதவிகள் கிடைத்துஅந்தஸ்து, மரியாதையும் கூடும். உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களின் அன்பு அதிகமாகும். புத்திரபாக்கியம் ஏற்படும். உங்களுக்கு இதுவரை வராது இருந்த நிலுவைகள், கடன்கள்,விரைவில், சுலபமாக வசூலாகும்.
செவ்வாய் - தொழில்களில் நல்ல வருமானம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். சிலருக்குக் கண்நோய் ஏற்படலாம். விவாகம் நடக்கும். சந்ததி விருத்தியாகும். ஆண்டின் இறுதியில் பற்றாக்குறைகள்அதிகமாகும். ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். காரியங்களில் தடை, தாமதங்கள்ஏற்படலாம்.
புதன் - எதிரிகளை எளிதில் வென்று ஏற்றம் பெறுவீர்கள். வீடு, நிலம்போன்ற அசையாச் சொத்துக்களை எவ்விதத் தடைகளும் இன்றி வாங்குவீர்கள். ஆழம் தெரியாமல் காலைவிடாது, எதையும் ஆராய்ந்துமுடிவெடுப்பது நல்லது. புண்ணியத்தல யாத்திரைகளும், வெளிநாட்டுப்பயணங்களும் ஆதாயம் தரும். தவிர்க்க முடியாத சுப, அசுப விரயங்கள்ஏற்படும். வருடக் கடைசியில் சிலருக்கு அரசு வேலை கிடைக்கலாம். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சுக்கிரன் - திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வீடு புதிய சொத்துக்கள் வாங்குவர். நல்ல உறவுகள், உதவும் நண்பர்கள்அமைவர். வார்த்தை தவறாது, கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவர். கல்வியும்புகழும் ஓங்கும். சிலருக்கு இசையால் சம்பாத்தியம் பெருகும். கார் போன்ற உயர்ரக வாகனங்கள் வாங்குவர். ஐம்புலனுக்குரிய அனைத்து இன்பங்களும்கிடைக்கும்.
குரு - துலா இராசிக்கு குரு ஆவணி 27 இல் மாறுகிறார். ஆனிமாதம் வரைசுமாரான பலன்களைத் தருகிறார். அதற்குப் பிறகு தன பாவத்தில் அமர்வதால் அக் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாக்கு வன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். அந்தஸ்து, கௌரவமும் கூடும்.
சனி - இனி இன்னல்கள் மறைந்து இன்பம் பொங்கப்போகும் காலம். இனி எல்லாமே வெற்றிதான். அஷ்டலக்ஷ்மி கடாக்ஷமும், இராஜயோகமும் ஏற்படும். குழந்தைகள் மூலமாகப் பல நன்மைகள் ஏற்படும். வரவுக்கும், வரம்புக்கும் உட்பட்டு செலவுகள் அமையும். திருமணம், புத்திரப் பேறு ஆகியவை நல்லபடி நடக்கும். உழைப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். கொடூரமான வெய்யிலில்இருந்து குளிர் நிலவுக்கு வந்த்துபோல் ஓர் உணர்வு ஏற்படும்.
ராகு: ஆண்டின் முற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும்.
கேது: ஆண்டின் முற்பகுதியில் பலருடன் பிரச்சினைகளை கொடுப்பார் பிற்பகுதியில் பூர்வீக வீடு கிடைக்கும்.
துலாம்:
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி - 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3பாதங்கள்)
அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.
சூரியன்: தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல்வெற்றி கிட்டும். தங்கள் கல்வித் தகுதி, திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் சந்தோஷம், செல்வம் ஆகியவை ஏற்படுகின்றன. புதிய பதவிகளின் சொகுசை, மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம். தனலாபம், மரியாதை
மற்றும் முன்னேற்றங்கள் உண்டாகும். வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும், நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும். மனஅமைதி, இலாபம் மற்றும்உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.
செவ்வாய் - புதிய வியாபார முதலீடுகள் மூலமாக அதிக இலாபங்களை ஈட்டுவீர்கள். தங்கள் பணியிடங்களில், தீ அணைக்கும் கருவிகளின் பணித்திறனை சோதித்து அறிவது, விபத்தைத் தடுக்க உதவும். மனவியுடன் மனஸ்தாபம் தவிர்க்கத் தாஜா செய்வது பலன் அளிக்கும். வழக்குகளில் வெற்றியும், உயர்அதிகாரிகளின் ஆதரவும்
இருக்கும். அதன் பிறகு பூமி லாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
புதன் - வருட துவக்கத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். வாக்கால் வருமானம் பெருகும். கணவன் மனைவிக்குள்
கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அலைச்சல் தரும் பயணங்களும், மரியாதையையும், புகழையும் தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நம்பிக்கையான நட்புறவு, நல்லுணவு ஆகியவை கிடைக்கும்.உறவுகளுடன் நல்லுறவில் முன்னேற்றம் ஏற்படும்.
சுக்கிரன் - வீட்டில் பெண்கள் மகிழ்ச்சி அடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும், நல்ல காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும். தொழிலில் வெற்றி, பண ஆதாயம், முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டு,மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். .
குரு - வருடத் துவக்கத்தில் விரய பாவத்திலும், பின்னர் ஜன்மத்திலும் சஞ்சரிக்கிறார். அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். ஆவணி 27 க்குப் பிறகு இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும், மகிழ்ச்சியும் குறையும். பிறர் வழங்கும்மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவேஇருக்கும்.
சனி - தைரிய பாவத்தில் சஞ்சரிக்கும் சனி, இதுநாள்வரை தனபாவத்தில் இருந்து தந்த துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நற்பலன்களைத் தருவார். சீரான உடல் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையில் படிப்படியானமுன்னேற்றங்களையும், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் தருகிறார். செய்தொழில், வியாபாரம் எதுவாகினும் ஜீவன அபிவிருத்திக்கு திருப்திகரமானசூழலை உருவாக்கும்.
ராகு: ஆண்டு முழுவதும் தொழிலும் தொழில் லாபமும் சிறப்பாக இருக்கும்.
கேது: ஆண்டு முழுவதும் கல்வியில் மேன்மை நிலையைத் தருவார்.
விருச்சிகம்:
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.
சூரியன்: எதிரிகளை வென்று, வெற்றி மேல்வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர்அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மலையென அந்தஸ்து உயரும். இரக்க குணம் அதிகரித்து தானதர்மம் செய்வீர்கள்.
செவ்வாய்: கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மதிப்பு,மரியாதைகள் கூடும். கூடுதலான தன வருமானத்தால் பணப்புழக்கம் சிறப்பாகஇருக்கும். திருமணம், மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமானதருணங்களாக அமையும். சிறு விபத்துக்கள்,காயங்கள் ஏற்படலாம். கோபத்தால் காரியங்கள்கெடலாம்.
எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.
புதன்: புதிய தொழில், வணிக முயற்சிகள் வெற்றி பெற புத்துணர்வோடுசெயல்படுவது நல்லது. சிலருக்கு உயர் கல்வியில் தேர்ச்சியும், அரசுஉத்தியோகமும் கிடைக்கலாம். எழுத்துத் தொழில் ஏற்றம் தரும். பல பரிசுகளும்,கௌரவமும் கிடைக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். சாதுர்யமும்,
சாமர்த்தியமும் பெருகும். பங்கு மார்க்கெட் வகையில்அதிக லாபம் அடைவீர்கள்.
சுக்கிரன்: குழந்தைகளின் வகையில் சுபச்செலவுகள் இருக்கும். மகிழ்ச்சிகரமான வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். கடின உழைப்பால்,விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும். பின்னர் வரும்காலத்தில் நல்ல குணமுள்ள நண்பர்களுடன் மட்டுமான சவகாசம் மட்டுமே உயர்வைத் தரும். சிலருக்குக் கடன்கள், அதிகமாகும். பெண்களால் நஷ்டம் ஏற்படும். சொத்துக்கள் சேரும். விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர்.
குரு: தற்போது இலாப பாவத்தில் சஞ்சரிக்கும் குரு ஆவணி 27 க்குப்பிறகு விரய பாவத்தில் இடம் பெறுகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஆகியவை ஏற்படும். முற்பகுதியில் இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாகக் கிடைக்கும். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.
சனி - தன பாவத்தில் அமர்ந்து குடும்பத்தில் மனக்கவலைகளை அளித்து வந்த சனி தன் 3, 7, 10 ஆகிய இடங்களின் மீதான பார்வையால்முயற்சிகளை வெற்றி பெற செய்வார். பதறிய காரியம் சிதறும் ஆதலால்,நிதானமாகப் பொறுமையுடன் காரியங்களில் ஈடுபட்டால் சிறப்பாக அமையும்.புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல் படுவது சிக்கல்களையும், சிரமத்தையும் குறைக்கும்.சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடி, எள் தீபம் ஏற்றி,கருப்பு வஸ்திரம் சாத்தி, மனதார வேண்டி வணங்க, கதிரவனைக் கண்டபனிபோல் கஷ்டங்களும் மறையும்.
ராகு : ஆண்டின் முற்பகுதியில் தொழில் நிலை சிறப்படையும், பிற்பகுதியில் பிதுர் ராஜ்ஜித சொத்துக்கள் கிடைக்கும்.
கேது : ஆண்டின் முற்பகுதியில் வீடு மனை, நிலம் வாங்குவீர்கள், பிற்பகுதியில் அலைச்சல் அலைச்சல் அதிகரிக்கும்.