இரட்டை திருப்பதி ஸ்ரீ அரவிந்தலோசனர் ஆலயம்: கேது தலம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில் ஆகும். இத்திருத்தலம் நவதிருப்பதிகளில் ஆறாவது தலமாகும் மேலும் திவ்யதேசங்களில் ஐம்பத்தாறாவது திவ்யதேசமாகவும் அமைந்துள்ளது.
தல வரலாறு:
சுப்ரபர் மகரிஷி தினமும் தேவர்பிரான் சந்நிதிக்கு வட திசையிலுள்ள பொய்கைக்கு சென்று அங்குள்ள தாமரைப் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து பெருமானை அணியச் செய்து மகிழ்வித்து வந்தார். இதனால் திருஉள்ளம் மகிழ்ந்த தேவர்பிரான் சுப்ரபர் எங்கிருந்து இந்த மலர் மாலைகளை கொண்டு வந்து அணிவிக்கிறார் என்பதை அறிய அவரைப் பின் தொடர்ந்தார்.
பொய்கையின் குளிர்ச்சியில் மகிழ்ந்து, தாம் இனி இங்கேயே வசிக்க உள்ளதாக தெரிவித்தார். சுப்ரபர் இரட்டைத் திருப்பதிகளில் உள்ள இரண்டு பெருமாளுக்கும் தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வந்து நற்கதியடைந்தார்.
இலக்கியச் சிறப்பு:
இத்திருத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. (ஆறாம் பத்து 5ம்திருவாய்மொழி 8ம் பாட்டு)
தனிச் சிறப்பு:
நம்மாழ்வாரால் பாடல் பெற்றது. இங்கு அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருப்பதால் இரட்டைத் திருப்பதி என அழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் நவதிருப்பதிகளில் ஆறாவது தலமாகும் மேலும் திவ்யதேசங்களில் ஐம்பத்தாறாவது திவ்யதேசமாகவும் அமைந்துள்ளது.
இத்திருத்தலம் நவக்கிரகங்களில் கேது தலமாக கேதுவின் தோஷத்திலிருந்து விடுபடவும் வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் கொடுப்பதே இத்தலத்தின் சிறப்பாகும்.
அமைவிடம்:
திருவைகுண்டத்திலிருந்து பெருங்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆழ்வார்திருநகரி மற்றும் திருவைகுண்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவன் : அருள்மிகு அரவிந்தலோசனர்
இறைவி : அருள்மிகு கருத்தடங்கண்ணி
தீர்த்தம் : அஸ்வினி தீர்த்தம்
ஆகமம் : வைகானசம்
தலவிருட்சம் : விளாமரம்
விமானம் : குமுத விமானம்