அடியார்களின் அச்சத்தை போக்கும் காலபைரவர்
காவல் தெய்வமாக விளங்கும் காலபைரவர் மக்களின் கஷ்டங்களையும், கடன்களையும் போக்குபவராக விளங்குகிறார். இதனாலேயே, இன்றைக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு பிரபலமடைந்து வருகிறது. நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது மதுரையின்
மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் ஆகும்.
காலபைரவர்:
இந்த பிரபஞ்சத்தில் வாழும் சகல ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கும் நவ கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும். காலச் சக்கரத்தில் சிக்கி துன்புறும் பக்தர்களை காப்பாற்றுவதால் ஆபத்தாரணர் என்று போற்றி புகழப்படுகிறார். காலத்தின் கட்டுப்பாட்டை கடந்து துன்பப்படும் பக்தர்களுக்கு நன்மை செய்பவர் காலபைரவர் ஆவார்.
பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குபவர் என்றும் பயத்தை போக்குபவர் என்றும் பொருள். காலபைரவர் சட்டநாதர், மகா காளர், பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அடியார்களுடைய பயத்தை போக்குவதும் அடியார்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவரும் இவரது அருள்பாலிக்கும் செயல்களாகும்.
காலபைரவரின் தோற்றம்:
ஆதியில் பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. உலகில் நானே உயர்ந்தவன் இணையற்ற பரம்பொருள் எல்லாம் வல்லவன் நான் என்று அகந்தையுடன் இருந்தார். பிரம்ம தேவனின் அகந்தையை கண்டதும் சிவபெருமானிடமிருந்து ஒரு பெரும் சக்தி உக்கிரசக்தியாக தோன்றியது.
அந்த சக்தியை காண்போர்கள் பயங்கொள்ளும் வண்ணம் எல்லாகரங்களிலும் ஆயுதங்களுடன் தோன்றி அகந்தை கொண்ட பிரம்மனின் ஐந்து தலைகளில் அகங்காரத்திற்கு காரணமான தலையை கிள்ளி எரிந்தது. இதன் பிறகு பிரம்மனின் அகந்தை அழிந்தது.
காலபைரவரின் பெருமை:
பெரும்பாலான சிவன் கோயில்களில் காலபைரவர் காவல் தெய்வமாக இருக்கிறார். கோயில் பூஜையெல்லாம் முடிந்து கடைசியில் பைரவருக்கு பூஜை நடத்தி கோயில் சாவியை காலபரவரிடம் ஒப்படைப்பது வழக்கம்.
கோயில் பலிபீடத்தில் அஷ்ட பைரவர்களுக் உறைவதால் பலி பீட பூஜையின் போது இவர்களும் பூஜிக்கப்படுகிறார்கள். பைரவருக்கு க்ஷேத்திரபாலன் என்ற பெயரும் உண்டு. புண்ணிய நதி தீரம், புண்ணிய க்ஷேத்திரம் யாகசாலை, தவ சாலை இவையெல்லாம் பைரவரின் காவலுக்கு உட்பட்டதாகும்.. ஊர் எல்லையிலும் இவரே காவல் தெய்வமாக இருக்கிறார்.
திருக்கோயிலின் சிறப்பம்சம்:
காசியிலிருக்கும் காலபைரவர் கோயில் பிரசித்தி பெற்றது. காசிக்கு செல்லும் அனைவரும் இந்த தெய்வத்தை வணங்குகின்றனர். காசிக்கு அடுத்தபடியாக மதுரையிலிருக்கும் காலபைரவர் கோயில் பிரசித்தி பெற்றதாகும். அஷ்டமி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீர்வாகின்றன.
எலுமிச்சம் பழத்தை திரிசூலத்தில் படைப்பவர்களுக்கு நோய்களிலுருந்து விடுபடுகிறார்கள்.
பூசனிக்காய் நெய் தீபம் ஏற்றுபவர்கள் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுகிறார்கள்.
திருக்கோயிலின் அமைவிடம்:
அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் கீழ ஆவணி மூலவீதியில் உள்ளது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலாகும். புது மண்டபம் அருகில் உள்ள கோயிலுக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஐந்து நிமிடத்தில் நடந்து வந்து விடலாம்.
மூலவர்:
காலபைரவர் இத்திருக்கோயிலில் காலபைரவர் மட்டுமே சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.