ஸ்ரீராமரின் பாதங்களை பார்க்க கயத்தாறு கோதண்டராமேஸ்வரர் ஆலயம் செல்லுங்கள்!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கயத்தாரில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமேஸ்வரர் திருக்கோயிலாகும். ஸ்ரீராமர் பாதங்கள் அமைந்துள்ள பெருமை பெற்றது.
ராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கி சிவனை வழிபட்டதாகவும், அப்போதுதான் சிவனிடம் இருந்து கோதண்டத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், கோதண்ட ராமேஸ்வரர் என்று இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் நாயக்கர்களால் மேம்படுத்தப்பட்டது. மிகப் பழைமையான இக்கோயில் ராமாயண காலத்தைச் சேர்ந்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தல வரலாறு:
இராமபிரான் சீதா தேவியோடும் தம்பி இலக்குவணனோடும் வனவாசம் புரிந்தபோது இவ்விடத்திற்கு வருகை புரிந்துள்ளனர், அப்போது அவருடைய இருபாதங்கள் பாறையின் மேல் பதிந்து உள்ளது. ஸ்ரீராமர் பாதங்கள் நினைவாகவே இத்திருக்கோயில் எழுந்துள்ளது.
புராணச் சிறப்பு:
ஸ்ரீராமர் தன் தந்தையின் கட்டளையை ஏற்று சீதா தேவியோடும் தம்பி இலக்குமணனோடும் வனவாசம் புரிந்த காலத்தில் காடாக இருந்த இத்திருக்கோயில் உள்ள இடத்தருகே வந்த போது அன்னை சீதாபிராட்டிக்கு தாகம் ஏற்பட்டது அன்னையின் தாகம் தீர்க்க இராமபிரான் தான் வித்திருந்த கோதண்டத்தால் தரையில் அம்பு விட அதிலிருந்து ஊற்று கிளம்பியது. அந்த நீர் கசப்பாக இருந்தது. அந்த ஊற்றே ஆறாக ஒடுவதாகவும் அதுவே கசந்த ஆறு என்றும் பின்னர் கயத்தாறு என மருவி விட்டதாகவும் கூறுவர்.
ஊற்று ஏற்படுத்த கோதண்டத்தை வளைத்த போது ஸ்ரீராமருடைய பாதங்கள் அழுந்திய பாறையில் அவருடைய இருபாதங்கள் பதிந்து உள்ளது என்கின்றனர் இவ்வூர் மக்கள். அந்த பாறையில் உள்ள ராமர் பாதத்தை இன்றும் அவர்கள் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். இன்றும் எந்த வறட்சியிலும் வற்றாத ஊற்றாக ராமர் பாதம் உள்ள பாறையிலிருந்து ஊற்று நீர் ஓடி வருவது உலகம் வியக்கும் விந்தையாகும்.
தலச் சிறப்பு
இத்திருக்கோயில் வரலாற்று சிறப்பினை கூறுகையில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுக்கள் இத்திருக்கோயிலின் அம்மன் சந்நதி முன்பு இருக்கின்றன. இத்திருக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் இருந்த வைணவ திருக்கோயில், வசைகவி புலவன் ஆண்டான் கவிராயரால் ‘பாழை மணங்கமழும் கயத்தாற்றுப் பதியே' என பாடி ‘என்னாளும் உன் கோயில் நாசம்தானே' என் பாடியதால் மண்மாரி பெய்து புதையுண்ட பெருமாள் கோயிலின் மண் மேடு இன்றும் உள்ளது. அழிந்து விட்ட பெருமாள் கோயிலின் உற்சவ விக்கிரகங்களும் கல் விக்கிரகங்களும் இத்திருக்கோயிலில் உள்ளன.
தனிச் சிறப்பு:
இத்திருக்கோயிலின் முன்புறமுள்ள சிற்றாறு எந்த வறட்சியிலும் வற்றாத ஊற்றாக ராமர் பாதம் உள்ள பாறையிலிருந்து ஊற்று நீர் ஓடி வருவது தனிச்சிறப்பாகும். மேலும் இந்த ஆறு வடக்கிலிருந்து தெற்காக ஓடுவது மற்றொரு தனிச் சிறப்பாகும்.
இத்திருக்கோயில் சுவாமி கோதண்டராமேஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். மூலவரை தரிசித்து வேண்டும் வரம் பெற்றுத் திரும்பும்போது மகாமண்டபத்தின் இடதுபுற சுவற்றில் கல் திறவு கொண்ட சுரங்கம் உள்ளது, அதில் ஒன்றரை அடி அகலமும் ஒன்றரை அடி நீளமும் அளவுள்ள நான்கு கற்கள் இருக்கிறது, அதை நகர்த்தினால் உள்ளே ஒரு அறை (நிலவறை) தெரிகிறது. இந்த சுரங்க அறையில் தான் முன்பு இத்திருக்கோயில் உற்சவ விக்கிரமும் திருவாபரணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்ததாக இங்குள்ள பக்தர்கள் கூறுகின்றனர்.
அமைவிடம்:
மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி நகரின் மத்தியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இறைவன்: அருள்மிகு கோதண்டராமேசுவரர்
இறவி: அருள்தரும் அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்: கயத்தாறு ராமர் தீர்த்தம், கோடி தீர்த்தம்
தல விருட்சம்: வில்வமரம்