வளம் தரும் ஆலயங்கள்- குச்சனூர் சனிபகவான்
நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப் பற்றியும், குச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆலயத்தைப் பற்றியும் இந்தவாரம் வளம் தரும் ஆலயங்கள் பகுதியில் பார்க்கலாம்.
சனி பகவானின் சிறப்புகள்:
30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவரும் இல்லை என்பது வழக்கில் உள்ள சொல் வழக்காகும். அதாவது 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக எந்தவித சிரமங்கள் கஷ்டங்கள் தோல்விகள் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர்களும் கிடையாது அதே போல் 30 ஆண்டுகள் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்தவர்களும் கிடையாது என்பது இதன் பொருளாகும்.
30 ஆண்டுகள்
சனி பகவான் ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இந்த 30 ஆண்டுகளில் பலவித சுக-துக்கங்களை சனி பகவான் உலக மக்களுக்கு வழங்குகிறார்.
நீதிபகவான்
சனியைப் போல் கொடுப்பார் இல்லை என்பதும் வழக்கில் இருக்கிறது மேலும் சனி கொடுப்பதை யாரும் தடுக்கமுடியாது கெடுக்க முடியாது என்பதும் நம்பிக்கை ஆகும். சனி பகவான் நீதி நேர்மைக்கும் உழைப்பிற்கும் காரகர் ஆவார். எனவே உழைப்பிற்கு அஞ்சாதவர்களுக்கு சனி பகவான் அள்ளி கொடுப்பதற்க்கு தவறுவதில்லை
சனியின் பார்வை
சனி பகவான் மக்களை தன் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய காலங்களான ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகிய காலங்களில் சற்று சிரமங்களை கொடுக்கிறார். மேலும் ஜாதகத்தில் தன்னுடைய தசா-புக்தி காலங்களில் சற்று சிரமங்களை கொடுக்கிறார். ஜாதக ரீதியாக சனி பகவான் தரும் சிரமங்களை குறைத்துக் கொள்வதற்காக சனி பகவானின் அருள் கடாட்சம் மிகுந்த ஸ்தலங்களில் வழிபாடு செய்வது சிறப்பு.
சுயம்பு நாதர்
சனி பகவான் சுயம்புவாக உதித்து தன்னை நாடி வருபவர்களுக்கு இன்பம் தரும் ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்தது குச்சனூர் ஆகும். குச்சனூர் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஆலயத்தின் சிறப்புகள்:
இங்கு சனி பகவான் சுரபி ஆற்றங்கரையில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் இவர் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே இருப்பதாக நம்பிக்கை. மேலும் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட சனி பகவான் இங்கு தோஷ நிவர்த்தி பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது. சனிக்கு எத்தனை பரிகார தலங்கள் இருந்தாலும் குச்சனூரில் மட்டுமே சுயம்புவாக அமைந்துள்ளார். மேலும் சனியின் விருட்சமான வன்னிமரத்தடியில் மூலவர் அமர்ந்துள்ளது சிறப்பு.
குச்சனூர் அமைவிடம்:
தேனியிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சின்னமனூர் என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் குச்சனூரை அடையலாம். சனி பகவானுக்குறிய வழிபாட்டுப் பொருட்கள் அனைத்தும் கோவிலின் வளாகத்திலேயே கிடைக்கிறது.
ஜோதிடவியலில் சனி பகவான் உத்தியோகத்திற்க்கு பொருப்பு வகிக்கிறார் எனவே உத்தியோகத்தில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்கு இங்கு வழிபட்டு வருவது சிறப்பு.