மன்மத ஆண்டு ... மகரம் ராசிக்காரர்கள் குடும்பத்தில் குதூகலம்தான்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மகரம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
எதையும் யோசித்து பார்க்கும் திறன், பல வழிகளில் சாமர்த்தியம் காட்டி தன்னிடம் எதுவும் இல்லாதது போல் நடந்து கொண்டும், பிறர் கருத்துகளை ஏற்றுக் கொண்டாலும் தன் எண்ணப்படி காரியம் ஆற்றுபவர்களே. பிறர் சொல்வதை தான் கேட்டுக் கொண்டாலும் அல்லது தன்னுடைய கருத்தைப் பிறர் கேட்டாலும், மற்றவருடைய அபிராயத்தை தான் கேட்டுக் கொள்வீர்கள் தன்னுடைய அபிப்ராயத்தை கூற மாட்டீர்கள். எதை கேட்டாலும் ஆம், இல்லை என்று பதில் வராது. அடுத்து என்ன என்று திரும்பி கேட்டும் தன்மையும், தன் மனதுக்குள்ளேயே சில பிரச்சனைகளை போட்டு போராடி போராடி தானே தனக்கு தீர்வு காண்பீர்கள்.
சனிபகவானால் காரியத்தடை
கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக கடந்த ஆண்டு பத்தாம் இடத்தில் இருந்து உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்கி இருப்பார். அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும் தொழில் மந்த நிலையையும் கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு கௌரவம் போன்றவைக்கும் பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைத்திருக்காது. ஆனாலும் குருபகவானும், கேதுவும் உங்களுக்கு நன்மை தந்து உங்களை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பொருளாதார வளம்
சனிபகவான் இப்போது பதினொன்றாம் இடத்தில் இருக்கின்றார். இது சாதகமான இடம், பல்வேறு நன்மைகளைத் தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும், பொருளாதார வளம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் குதூகலம்
நீண்ட காலமாக வாங்க நினைத்திருந்த பொருளை வாங்கி மகிழலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தோறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து விழா என உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருவினால் மகிழ்ச்சி
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நன்மைகள் அதிகம் நடக்கும் குரு பகவான் ஏழாம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவார். செல்வாக்கு மேம்படும் பணப்புழக்கம் அதிகரிக்கும், தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். அதோடு குருபகவானின் ஐந்தாம் இடத்துப் பார்வையும் நன்மை தரும்.
பரிகாரம் செய்யுங்க
ஸ்ரீசுதர்ஸ்சன ஹோமம் ஸ்ரீஆஞ்சநேயர் ஹோமம் ஆகியவற்றை வீட்டிலோ அல்லது புண்ணிய ஸ்தலங்களிலோ செய்து கொள்ள நன்மை உண்டாகும். இடைகாட்டூர் சென்று இடைக்காட்டுச் சித்தரால் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து பின்னர் அன்னதானம் செய்து வர இந்த ஆண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.